வேலைவாய்ப்பு தொடர்பான குற்றங்கள் குறித்து மனிதவள அமைச்சின் பெயரில் வரும் போலி மின்னஞ்சல்களில் உள்ள இணைப்புகளைச் சொடுக்க வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தகைய புதிய வகை மோசடிகளுக்கு ஆளாவோருக்கு வரும் மின்னஞ்சல்களில், அவர்களின் நிறுவனங்கள் வேலை நியமனச் சட்டத்தை மீறியுள்ளது தொடர்பான தகவல்கள் இருக்கும் எனக் காவல்துறை செவ்வாய்க்கிழமை (மே 19) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்தப் போலி மின்னஞ்சலைப் பெறுவோர், அதில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் வழியாக ஆவணங்களைச் சரிபார்க்குமாறு மோசடிக்காரர்களால் கேட்டுக்கொள்ளப்படுவர். அந்த இணைப்பைச் சொடுக்குபோது, அது அவர்களைப் போலியான மனிதவள அமைச்சின் இணையப்பக்கத்திற்கு இட்டுச்செல்லும்.
அங்கு ஆவணங்கள் இருப்பதாகக் கூறப்படும் கோப்பைத் திறந்தவுடன், அவர்களின் கணினி அல்லது கைபேசி போன்ற கருவிகளில் தீங்கு நிரல் தானாகவே பதிவிறக்கம் ஆகிவிடும். இதன் மூலம், அந்தக் கருவிகளை அனுமதியின்றி இயக்கும் வசதியை மோசடிப்பேர்வழிகள் பெறுவர். அதனைத் தொடர்ந்தே காவல்துறையின் அண்மை எச்சரிக்கை வந்துள்ளது.

