ரெட்ஹில் சந்தைக்கு அருகே குளவிகள் தாக்கியதால் நால்வர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சம்பவம் ரெட்ஹில் லேனில் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) நடந்தது. குளவி தாக்கியது பற்றி அன்று பிற்பகல் ஒரு மணிவாக்கில் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தஞ்சோங் பகார் நகர மன்றமும் தெரிவித்தன.
ரெட்ஹில் லேனில் உள்ள புளோக் 78க்கும் ஷெல் பெட்ரோல் நிலையத்திற்கும் இடையில் உள்ள நடைபாதைக்குப் பக்கத்தில் இருந்த மரத்தில் குளவிகள் கூடு கட்டியிருந்தன. கூட்டிலிருந்த குளவிகள் அந்தப் பக்கம் சென்றவர்களைத் துரத்தித் துரத்தித் தாக்கியதாகச் சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறினர்.
பாதிக்கப்பட்ட பகுதிக்குள் யாரும் போகாத வண்ணம் அதைச் சுற்றிக் குடிமைத் தற்காப்புப் படையின் அதிகாரிகள் தடுப்புகளை அமைத்தனர். கூட்டை அகற்றுமாறு பூச்சிக் கட்டுப்பாட்டு ஒப்பந்ததாரரிடம் கூறப்பட்டது.
பொதுமக்கள் அந்த வட்டாரத்தைப் பயன்படுத்த ஏதுவாகக் கூடு பத்திரமாக அகற்றப்பட்டது என்று நகர மன்றம் தெரிவித்தது.
குளவியால் கொட்டப்பட்ட 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மிகவும் சிரமப்பட்டார். அவரின் காதுகள் சிவந்திருந்ததோடு வீங்கியுமிருந்தன. ரத்தம் கொட்டியது. தலைவலியால் துன்புற்ற அவருக்கு மயக்கம் வந்ததாகவும் சொல்லப்பட்டது.
தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையின் இணையத்தளத் தகவலின்படி, குளவிகள் பலமுறை கொட்டக்கூடியவை; மேலும், இவை தேனீக்கள் அல்லது சிறிய வகைக் குளவிகளுடன் ஒப்பிடும்போது, ஒவ்வொரு முறை கொட்டும்போதும் அதிக அளவில் விஷத்தை உடலில் செலுத்துவதாகக் கூறப்பட்டது.
அண்மைச் சம்பவம் குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம், தேசியப் பூங்காக் கழகத்திடம் மேல்விவரங்களைக் கேட்டுள்ளது.

