சனிக்கிழமை (பிப்ரவரி 1ஆம் தேதி) லாவண்டர் பகுதியில் நீர்க்குழாய் வெடித்து நீர் விநியோகம் தடைபட்ட நிலையில் பிரச்சினை தீர்க்கப்பட்டு நீர் விநியோகம் மீண்டும் ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி தகவல் தெரிவிக்கும் தேசிய நீர் முகவையான பொதுப் பயனீட்டுக் கழகம், பாதிக்கப்பட்ட இல்லங்களுக்கு ஞாயிறு (பிப்ரவரி 2ஆம் தேதி) அதிகாலை 2.45 மணிக்கு முழுமையாக மீண்டும் நீர் விநியோகம் ஏற்படும் வகையில் பிரச்சினை சரிசெய்யப்பட்டு விட்டதாகத் தெரிவித்தது.
“சேதமடைந்த நீர்க்குழாய்ப் பகுதியில் மாற்றுக் குழாயைப் பொருத்தும் பணி தொடர்வதாகவும் அதற்கான நிலஅகழ்வுப் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,” கழகம் கூறியது.
அத்துடன், பழுதுபார்ப்பு பணியில் புளோக் 811 ஃபிரஞ்சு ரோடு கார் நிறுத்தப் பகுதிக்கு செல்லும் சாலையின் ஒரு பகுதியிலும் வேலை நடப்பதால், அங்கு போக்குவரத்தை நிலைப்படுத்த துணை காவல்துறை அதிகாரிகள் அமர்த்தப்பட்டுள்ளதாக கழகம் தெளிவுபடுத்தியது.
இது குறித்து சனிக்கிழமை (பிப்ரவரி 1ஆம் தேதி) புளோக் 811 வசிக்கும் கிராப்ஃபுட் உணவு விநியோக ஊழியர் ரம்தான் சபான் தான் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போது சாலையில் தண்ணீர் பீறிட்டு எழுந்து வருவதைத் தான் கண்டதாகத் தெரிவித்தார்.