ஓட்டுநர் இல்லாத கார் சேவையை வழங்கும் வேமோ (Waymo) நிறுவனம், சிங்கப்பூரில் 2028ஆம் ஆண்டு முதல் சேவையை வழங்கவுள்ளது.
தென்கிழக்காசிய நாடுகளில் தடம் பதிக்கும் எண்ணத்தில் வேமோ தனது அடியைச் சிங்கப்பூரில் வைக்கிறது.
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18), பாசிர் பாஞ்சாங்கில் உள்ள கூகல் நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் தலைமையகத்தில், தன்னுடைய திட்டங்களை வேமோ அறிவித்தது.
வேமோ நிறுவனம் கூகலின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் (Alphabet) தொழில்நுட்பக் குழுமத்தின் கீழ் உள்ள ஒரு பிரிவு.
வரும் மாதங்களில் சோதனை முயற்சியாக வேமோவின் கார்கள் உள்ளூர் சாலைகளில் வலம்வரும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஆரம்பகட்டமாக ஜாகுவார் ஐ-பேஸ் (Jaguar I-PACE) வாகனங்கள் பயன்படுத்தப்படும் என்றாலும், எத்தனை கார்கள் களமிறக்கப்படும் என்பதை நிறுவனம் வெளியிடவில்லை.
சிங்கப்பூரின் சாலை, வானிலை தகவல்களை கார்களில் உள்ள கணினிகள் நன்கு அறிந்துகொள்ளும் வகையில், தொடக்கத்தில் அந்த கார்களைப் பயிற்சி பெற்ற தானியங்கி வாகன நிபுணர்கள் ஓட்டுவார்கள்.
வாகன நிபுணர்கள், வாகன பராமரிப்பு, வாடிக்கையாளர் சேவை போன்ற பணிகளுக்கான ஊழியர்கள் உள்ளூரிலேயே பணி அமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
“அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் பொதுப் போக்குவரத்து நிறுத்தங்களுக்கு அருகில் ஏறுவதற்கோ அல்லது இறங்குவதற்கோ வேமோ கார் சேவையைப் பயன்படுத்துகின்றனர். குடியிருப்பு மற்றும் வணிக மையங்களில் ‘தொடக்கம் முதல் இறுதிப் பயணங்களுக்கான’ (first-and-last-mile) போக்குவரத்து இடைவெளியைக் குறைப்பதே எங்கள் நோக்கமாகும்,,” என்று வேமோ அதிகாரிகள் கூறினர்.
இதன் சேவைகள் தொடங்கப்படும்போது, வேமோவின் வாகனங்கள் தீவு முழுவதும் கிடைக்குமா அல்லது சிங்கப்பூரின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கட்டுப்படுத்தப்படுமா என்பது தெளிவாகக் குறிப்பிடவில்லை.
இது குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க நகரங்களில், 2020ஆம் ஆண்டு முதல் செயல்படும் வேமோ பல மில்லியன் பயணங்களை வழங்கியுள்ளது.
