சிங்கப்பூரில் வாட்ஸ்அப் குழு மூலம் சிறார் தொடர்பான 17 ஆபாசக் காணொளிகளைப் பகிர்ந்த வாட்ஸ்அப் குழு நிர்வாகிக்கு 18 மாதம் 2 வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த ஹிண்டகும்ரே சரிந்த தில்ஷன் ராஜபக்சே என்ற ஆடவருக்குத் திருமணமாகி மூன்று வயதில் குழந்தை உள்ளது.
30 வயதான ஹிண்டகும்ரே மார்ச் 2ஆம் தேதி தமது குற்றங்களை ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை (மார்ச் 31) அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் பகிர்ந்த காணொளிகளில் கடத்தப்பட்ட குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது, சிறுவன் விலங்குடன் உறவுகொள்வது போன்றவை இருந்தன.
இவ்வழக்குடன் சம்பந்தப்பட்ட மற்றோர் இலங்கை ஆடவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஹிண்டகும்ரே 2020 மார்ச் 16ஆம் தேதிக்கும் ஜூலை 26ஆம் தேதிக்கும் இடையில் 943 ஆபாசக் காணொளிகளைப் பகிர்ந்தார்.
அவர் 2020 ஆகஸ்ட் 6ஆம் தேதி லாவண்டர் ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படி நடந்துகொண்டார்.
அதனையடுத்து, அங்கு பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் ஹிண்டகும்ரேவைச் சோதித்தனர். அப்போது அவரது கைப்பேசியில் ஆபாசக் காணொளிகள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அவர் நிர்வகித்த ஆபாசக் காணொளி வாட்ஸ்அப் குழுவில் 520 பேர் உறுப்பினர்களாக இருந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.