காவல்துறை ஆய்வாளராக இருந்த தனது கணவரான பேட்ரிக் லிம் கெய் ஹாவ்விடம் தனக்கு அறிமுகமான நபர் ஒருவருக்குத் தேவையானத் தகவலைக் காவல்துறை சிறப்பு வழிமுறைகளைப் பயன்படுத்தி தேடித்தருமாறு ஜென்னி பாம் தி ஹியூ கேட்டுக்கொண்டார்.
முதலில் அச்செயலைச் செய்ய லிம் தயங்கியபோதும் ஜென்னி அவரைக் கடிந்து கொண்டதால் அதைச் செய்ய அவர் சம்மதித்தார்.
நிலுவையில் இருந்த தொகையைப் பெறுவதற்காக வாடிக்கையாளர் ஒருவரின் தனிநபர் விவரங்களை அந்த நபர் கேட்டதாகச் சொல்லப்படுகிறது.
அந்த நபர் கேட்ட விவரங்களை லிம் பகிர்ந்துகொண்டதாகக் கூறப்பட்டது.
மற்றொரு வழக்கில், பாம் வேறொரு பெண்ணுக்கு வேறு சிலரின் வங்கிக் கணக்குகளுக்கு மின்னிலக்கக் கட்டண வில்லைகளை அமைக்க உதவியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதிகாரபூர்வ ரகசியச் சட்டத்தின்கீழ் ஒரு குற்றச்சாட்டும் கணினி அமைப்பைத் தவறாகப் பயன்படுத்தியதாக இரு குற்றச்சாட்டுகளும் பாம்மீது சுமத்தப்பட்டிருந்தன.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட 40 வயது பாமிற்குச் செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 17) 32 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவரது கணவர் லிம்மிற்கு 2025ஆம் ஆண்டு அக்டோபரில் மூன்று வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவரின் வயது 46.
தொடர்புடைய செய்திகள்
2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூர்க் காவல் துறையிலிருந்து லிம் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

