‘ஃபன் காஃபி’ மோசடி தொடர்பாக 49 வயதுப் பெண் ஒருவர் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டள்ளார்.
கடந்த வியாழக்கிழமை அந்தச் கைது சம்பவம் நிகழ்ந்ததாக சிங்கப்பூர்க் காவல்துறை சனிக்கிழமை (ஆகஸ்ட் 8) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
அந்தப் பெண் ஃபன் காஃபி முதலீட்டுத் திட்டத்தை தீவிரமாக விளம்பரப்படுத்தியதாகவும் அதில் சேர மற்றவர்களை ஊக்கப்படுத்தியதாகவும் காவல்துறை கூறியது.
முதலீட்டுத் திட்டத்தில் பங்கேற்க, பயனர்கள் ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
அமெரிக்க டாலருடன் இணைக்கப்பட்ட மின்னிலக்க நாணயம் சார்ந்த முறையில் பணப் பரிமாற்றம் செய்வதற்கான ஏற்பாடு அந்தச் செயலியில் இருக்கும்.
“இந்தத் திட்டங்கள் நம்பமுடியாத அளவிற்கு அதிக வருமானத்தை உறுதியளிக்கின்றன, மேலும் இந்தத் திட்டத்தில் சேர மற்றவர்களைச் சேர்ப்பதற்காகக் கூடுதல் தரகுத் தொகைகளையும் வழங்குகின்றன.”
“சிங்கப்பூரில் இந்த முதலீட்டுத் திட்டத்தில் பங்கேற்றவர்கள், பின்னர் ஃபன் காஃபி செயலி மூலம் தங்கள் நிதியை எடுக்க முடியவில்லை,” என்று காவல்துறை கூறியது.
வியட்னாமைத் தலைமையகமாகக்கொண்டு இயங்கி வந்த ‘ஃபன் காபி’ எனும் உணவக நிறுவனம் தொடர்புடைய நிதி மோசடி (பொன்சி திட்டம்) குறித்துச் சிங்கப்பூரைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் பலர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
ஹாங்காங், மக்காவ் ஆகிய பகுதிகயில் இத்திட்டத்தின் மூலம் 200க்கும் மேற்பட்டோர் ஏறக்குறைய 100 மில்லியன் ஹாங்காங் டாலரை (S$16.34 மில்லியன்) இழந்துள்ளனர். இது தொடர்பில், எட்டுப் பேரை அங்குள்ள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அந்த நிறுவனம் கடந்த ஆண்டு சிங்கப்பூருக்குள் கால்பதித்தது. ஜாலான் புசார் பகுதியில் அதற்கான பதிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அங்குச் சென்றபோது நுழைவாயிலில் காபி இயந்திரம் ஒன்று மட்டுமே காணப்பட்டது. ஃபன் காபி சிங்கப்பூரின் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன.


