மது அருந்திவிட்டு கார் ஓட்டிய சந்தேகத்தின்பேரில் 39 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்தப் பெண் தான் ஓட்டிச் சென்ற காரை அப்பர் தாம்சன் ரோட்டில் உள்ள வடிகாலில் விபத்துக்குள்ளாக்கினார்.
சம்பவம் வியாழக்கிழமை (மே 18) காலை நடந்ததாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக அதிகாலை 4:15 மணிவாக்கில் தங்களுக்குத் தகவல் வந்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
காரில் இருந்த பெண் பத்திரமாக மீட்கப்பட்டு டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அதன் பின்னர் அந்தப் பெண் காவல்துறை அதிகாரிகளால் மதுபோதையில் வாகனம் ஓட்டிய சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டார்.
விபத்து நடந்த இடத்தில் இன்னோர் ஆடவரும் கைது செய்யப்பட்டார். அவரும் மதுபோதையில் கார் ஓட்டியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
விசாரணை தொடர்கிறது.
மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றம் முதல்முறையாக உறுதிப்படுத்தப்பட்டால் 10,000 வெள்ளி வரையிலான அபராதமோ ஓர் ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையோ விதிக்கப்படலாம்.