வாடகை மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 42 வயது மாதுவைக் காவல்துறை கைது செய்தது. பாதிக்கப்பட்டவர்கள் அவரிடம் $7,000த்திற்கு மேல் இழந்திருக்கக்கூடும் எனக் காவல்துறை தெரிவித்தது.
ஜூன் 10ஆம் தேதிக்கும் 24ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் இந்த மோசடியைப் புரிந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது. அந்த மாது அங் மோ கியோ அவென்யூ 1ல் வாடகைக்கு அறைகள் இருப்பதாக கெரோசல், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் பதிவிட்டிருந்தார் என்றும் அதை நம்பி பாதிக்கப்பட்டவர்கள் அந்தப் பதிவுகளுக்கு பதில் அளித்தனர் என்றும் காவல்துறை தெரிவித்தது.
அந்த அறைகளை நேரில் பார்த்த பிறகு, பாதிக்கப்பட்டவர்களிடம் வைப்புத்தொகை செலுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.ஆனால், வைப்புத்தொகை பெற்றுக்கொண்ட பின்னர் அவர் வாடகை ஒப்பந்தத்தை ரத்து செய்ததாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைப்புத்தொகையைத் திரும்பத் தர தாமதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் அந்த மாதின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உட்லண்ட்ஸ் காவல்துறை பிரிவு அதிகாரிகள் அந்த மாதுவை புதன்கிழமை கைது செய்தனர். அவர் எட்டு வாடகை மோசடிகளில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த மாதுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.