உட்லண்ட்சில் மோட்டார்சைக்கிள் திருடப்பட்டதன் தொடர்பில் 32 வயதுப் பெண் வியாழக்கிழமை (ஜூன் 25) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உட்லண்ட்ஸ் டிரைவ் 52ல் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் திருட்டுச் சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
கவனிப்பாரற்றுச் சாவியுடன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளைப் பெண் ஓட்டிச்சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உட்லண்ட்ஸ் காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள், கண்காணிப்புப் படக்கருவிகளின் உதவியுடனும் விசாரணைகளின் மூலமும் அவரின் அடையாளத்தைக் கண்டுபிடித்தனர். மோட்டார்சைக்கிள் பின்னர் மீட்கப்பட்டது.
ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 81ல் நடந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் திருட்டுச் சம்பவத்திலும் அவருக்குத் தொடர்பிருப்பதாக நம்பப்படுகிறது.
திருட்டுக் குற்றச்சாட்டுடன் முறையான ஓட்டுநர் உரிமமின்றி மோட்டார்சைக்கிளை ஓட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்காகவும் அவர் விசாரிக்கப்படுகிறார்.
மோட்டார்சைக்கிள் திருடியதாகக் கூறப்படுவதன் தொடர்பில் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அவர்மீது குற்றஞ்சாட்டப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்தப் பெண்ணுக்கு ஏழாண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படக்கூடும்.

