எட்டோமிடேட் எனும் போதைப்பொருள் கலந்த 100 மின்சிகரெட்டுகளைக் கடத்தியதாக 25 வயதுப் பெண் மீது வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) குற்றம் சுமத்தப்பட்டது.
அவரிடம் காவல்துறை இவ்வாரம் விசாரணை நடத்தியது.
போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டுகளைக் கடத்தும் நோக்குடன் அவற்றை லோ ஹுயி மெய் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
அக்டோபர் மாதம் 22ஆம் தேதியன்று புளோக் 7 கிங் ஜார்ஜஸ் அவென்யூவின் தரைத்தளத்தில் அவர் அந்த மின்சிகரெட்டுகளுடன் இருந்ததாகக் குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த வட்டாரத்தில் காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது அவர் சிக்கியதாகச் சுகாதார அறிவியல் ஆணையம் வெள்ளிக்கிழமை ( ஆக்டோபர் 24) தெரிவித்தது.
போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டுகள் லோ வசம் இருப்பது தெரியவந்ததும் அதுகுறித்து சுகாதார அறிவியல் ஆணைய அதிகாரிகளிடம் காவல்துறை தகவல் அளித்தது.
லோவிடம் இருந்த 11 மின்சிகரெட்டுகளையும் 101 போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டுகளையும் சுகாதார அறிவியல் ஆணைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
லோ தொடர்பான வழக்கு அக்டோபர் 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அவர் தற்போது விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
விசாரணைக்காக அவர் வெளியே கொண்டு செல்லப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டுகளைக் கடத்துவோருக்கு செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து இரண்டிலிருந்து பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் இரண்டு முதல் ஐந்து பிரம்படிகள் வரை விதிக்கப்படலாம்.
பெண்களுக்குப் பிரம்படி விதிக்கப்படாது.

