காலாங் எம்ஆர்டி நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி மோதிய விபத்தில் 85 வயது மாது ஒருவர் உயிரிழந்தார்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணம் விளைவித்ததாக 68 வயது டாக்சி ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டதாகக் காவல்துறை புதன்கிழமை தெரிவித்தது.
அப்பர் பூன் கெங் சாலையை நோக்கிச் செல்லும் லோரோங் 1 கேலாங்கில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து செவ்வாய்க்கிழமை காலை 10.35 மணிக்கு காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரால் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவின்றி இருந்த அந்த மாது, பின்னர் அங்கு உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த கம்ஃபர்ட்டெல்குரோ பேச்சாளர், “இந்த விபத்தால் நாங்கள் மிகுந்த சோகமடைந்துள்ளோம். சிரமமான இந்த நேரத்தில், இறந்தவரின் குடும்பத்தாருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்,” என்றார்.
காவல்துறையின் விசாரணைக்கு தான் முழுமையாக ஒத்துழைப்பை வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட கம்ஃபர்ட்டெல்குரோ, தேவையான அனைத்து உதவியையும் வழங்க உறுதியளித்துள்ளது.

