தெம்பனிஸ் விரைவுச்சாலையில் (டிபிஇ) இன்று (பிப்ரவரி 20) காலை நடந்த விபத்தில் 26 வயது பெண் ஒருவர் மாண்டார். விபத்தின் தொடர்பில் 54 வயதான ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தீவு விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் தெம்பனிஸ் விரைவுச்சாலையில் இன்று காலை 8 மணியளவில் விபத்து நேர்ந்ததாக காவல்துறை தெரிவித்தது. இரண்டு மோட்டார்சைக்கிள்களுக்கும் சிறிய ரக பேருந்து ஒன்றுக்கும் இடையே விபத்து ஏற்பட்டது.
29 வயதான மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவருடன் பயணம் செய்த பெண் சுயநினைவு இழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அவர் பின்னர் மருத்துவமனையில் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 54 வயதான பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்துக்குள்ளான மற்றொரு மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.