தன் காதலனைக் காப்பாற்றுவதற்காகக் காவல்துறையிடம் பொய் சொன்ன பெண்ணுக்கு ஒரு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
டான் கியு யான், 24, என்ற அப்பெண்ணின் காதலர் இன்னோர் ஆடவருக்குக் குத்துவிட்டார். அந்த ஆடவர், தன் காதலியை முறைத்துப் பார்த்ததாக நினைத்து அவர் அப்படிச் செய்ததாகக் கூறப்பட்டது.
இதனையடுத்து, தன் காதலனைக் காப்பாற்ற நினைத்த யான், அந்த ஆடவர் தன்னை மானபங்கப்படுத்தி விட்டதாகக் காவல்துறையிடம் பொய் சொன்னார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி லெவண்டர் ஸ்திரீட்டில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
அவ்வழியே அந்த ஆடவர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது யானும் அவரின் காதலரான 23 வயது டான் ஜெக் ஹேயும் அவருக்கு எதிர்த்திசையில் நடந்து வந்தனர்.
அவர்களுக்கு வழிவிட்டு அந்த ஆடவர் ஒதுங்க முயன்றார். ஆனால், தன் காதலியை அவர் முறைத்துப் பார்த்ததாக டான் நினைத்தார்.
இதுபற்றி டான் அந்த முதிய ஆடவரிடம் கேட்க, தான் அப்பெண்ணை முறைத்துப் பார்க்கவில்லை என அவர் மறுத்தார். அதைக் கேட்க மறுத்த டான், அந்த ஆடவரின் இடது கன்னத்தில் குத்துவிட்டார். இதனால் அந்த ஆடவரின் கீழ்த் தாடையில் காயமேற்பட்டது.
அதன்பின் தன்னிடமிருந்து டானைத் தள்ளிவிட அந்த ஆடவர் முயன்றார். ஆயினும், டான் அவருடன் தொடர்ந்து வாக்குவாதம் செய்ததாகக் கூறப்பட்டது.
பாதிக்கப்பட்ட ஆடவர் அங்கிருந்து அகன்று, தன் நண்பர்களை உதவிக்கு அழைத்தார். சிறிது நேரத்தில் தன் நண்பர்களுடன் சென்று, கிச்சனர் வணிக வளாகத்தில் இருந்த டானுடன் வாக்குவாதம் செய்தனர்.
சம்பவ இடத்திற்குக் காவல்துறை வந்ததும், அந்த ஆடவர் தன் பின்பக்கத்தைத் தொட்டதாகவும் அதனால் தன் காதலர் அவருக்குக் குத்துவிட்டதாகவும் யான் கூறினார்.
காவல்துறை விசாரணையில், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், யான் கூறியவை பொய் என்பதை உறுதிசெய்தன.
இந்நிலையில், காவல்துறையிடம் பொய் சொன்னதாக யான் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 12) ஒப்புக்கொண்டார்.