மியன்மார் பணிப்பெண்ணை தாக்கி காயப்படுத்திய 51 வயது குடும்ப மாதுக்கு விரைவில் தண்டனை விதிக்கப்படவிருக்கிறது.
பணிப்பெண் தாங் காவ் லாம், வயது 30, தாக்கப்பட்டதால் ஒரு பக்கம் காது கேட்கும் திறனை இழந்தார்.
சிகிச்சைக்குப் பிறகு செவித்திறன் திரும்பியுள்ளது.
2017ல் தஞ்சோங் ரு சாலையில் 'பெப்பிள் பே' கூட்டுரிமை வீட்டில் உள்ள காயத்ரி ஐயரின் வீட்டில் பணிப்பெண்ணைத் தாக்கிய சம்பவங்கள் நடந்துள்ளன.
அதே ஆண்டில்தான் காயத்ரியின் வீட்டு வேலைக்கு அப்பணிப்பெண் சேர்ந்தார்.
அக்டோபர் 27ஆம் தேதி ‘மா ’ என்று தன்னை அழைத்ததற்காக பணிப்பெண்ணின் தோளில் மாது தாக்கியதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனால் அப்பணிப்பெண்ணுக்கு தோள்பட்டையிலிருந்து பின்பக்கம் வரை சிராய்ப்பு ஏற்பட்டது.
கடந்த 2017, டிசம்பர் 7ஆம் தேதி அதிகாலை 5.40 மணியளவில் நட ந்த மற்றொரு சம்பவத்தில் தேசிய சேவையில் ஈடுபட்டிருந்த தனது மகனை எழுப்பாததால் காயத்ரி ஐயர், பணிப்பெணை அறைந்தார்.
பணிப்பெண்ணுக்கு அன்று முழுவதும் ஒரு பக்கம் காது கேட்கவில்லை.
இந்தச் சம்பவம் நடந்து 5வது நாளில் காயத்ரியின் வீட்டிலிருந்து தப்பியோடிய தாங் போலிஸ் புகார் செய்தார்.
கடந்த 2018, செப்டம்பர் 5ஆம் தேதி சிசிச்சை பெற்று குணமடைந்ததால் தாங்குக்கு மீண்டும் காது கே ட்கத் தொடங்கியது.
தற்போது காயத்ரி $15,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வரும் மார்ச் மாதம் 17ஆம் தேதி அவருக்குத் தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிகிறது.
பணிப்பெண்ணைத் தாக்கிய ஒவ்வொரு குற்றத்திற்கும் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் 7,500 வெள்ளி வரை அபராதமும் விதிக்கப்படலாம்.