மதுபோதையில் தவறுதலாக உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்குள் காரை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய பெண்ணுக்கு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) இருவாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ரேச்சல் இயோ டிங்ரு, 36, எனும் அந்தப் பெண், அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் நான்கு மடங்கு மது அருந்தி இருந்தது சோதனையில் தெரியவந்தது.
இவ்வாண்டு மார்ச் 2ஆம் தேதி மாலையில் ஏற்கெனவே மூன்று குவளை ஒயின் அருந்திய நிலையில், டக்ஸ்டன் ரோட்டில் உள்ள ஒரு கடையில் அவர் மீண்டும் மதுபானம் வாங்கிக் குடித்ததாக காவல்துறை சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான அரசுத்தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
இரவு 10 மணியளவில் யூனோசில் உள்ள தமது வீட்டுக்கு காரில் புறப்பட்ட ரேச்சல், தவறான திசையில் காரைத் திருப்பியதால் அது உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்குள் நுழைந்தது.
காரில் அமர்ந்தவாறே குடிநுழைவு அதிகாரி ஒருவரிடம் அவர் பேசிக்கொண்டிருந்தபோது, கார் திடீரென்று முன்னோக்கிச் சென்று சாலையோரத் தடுப்பில் மோதி ஏறியது.
கைது செய்யப்பட்ட ரேச்சலிடம் சுவாசச் சோதனை செய்யப்பட்டது. அதன்மூலம், அவர் அளவுக்கு மீறி மது அருந்தி இருந்தது தெரிய வந்தது.
போதிய கவனமின்றி கார் ஓட்டியது, மது அருந்திய நிலையில் கார் ஓட்டியது ஆகிய குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், அவருக்கு $9,000 அபராதமும் ஐந்து ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டுவதற்கான தடையும் விதிக்கப்பட்டுள்ளது.