உல்லாசக் கப்பலிலிருந்து சிங்கப்பூர் நீரிணையில் திங்கட்கிழமை காலை விழுந்ததாகச் சொல்லப்படும் 64 வயது மாதின் மகன்களில் ஒருவர், தன் தாய் இறந்துவிட்டதை ஏற்றுக்கொண்டிருப்பதாக இன்ஸ்டகிராமில் பதிவிட்டிருக்கிறார்.
தன் தாயும் தந்தையும் பயணம் செய்த ஸ்பெக்ட்ரம் ஆஃப் த சீஸ் உல்லாசக் கப்பலின் சிசிடிவி பதிவுகளைக் குடும்பத்தினர் பார்த்ததாக திரு விவேக் சகானி செவ்வாய்க்கிழமை பதிவிட்டார். அதைப் பார்த்தபின் தன் தாய் இறந்துவிட்டதைத் தெரிந்துகொண்டதாக அவர் கூறியிருந்தார்.
கொய்லா பட்டர் சிக்கன் உணவகத்தின் இணை நிறுவனரான திரு விவேக், இரண்டு நாள்களாகத் தங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி கூறினார்.
இந்தியாவைச் சேர்ந்த 70 வயது திரு ஜகேஷ் சகானியும் அவரது மனைவி திருவாட்டி ரீட்டா சகானியும் நான்கு நாள் உல்லாசக் கப்பல் பயணத்திற்குப் பிறகு சிங்கப்பூருக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.
கப்பலிலிருந்து விழுந்த திருவாட்டி ரீட்டாவைத் தேடும் பணி செவ்வாய்க்கிழமை தொடர்ந்தது.