சிங்கப்பூரில் ஆள்மாறாட்ட மோசடியில் சிக்கிய 77 வயது மாது தமது சேமிப்பிலிருந்து $290,000 மோசடிக்காரர்களிடம் வழங்கினார்.
இருப்பினும், கடந்த அக்டோபர் மாதம் அவர் அதிலிருந்து 250,000 வெள்ளியை திரும்பப் பெற முடிந்தது.
‘ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்’ வங்கி ஊழியராக ஆள்மாறாட்டம் செய்த மோசடிக்காரர் ஒருவர், அந்த மாதின் கடன்பற்று அட்டையில் சில அனுமதி அளிக்கப்படாத பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதாக அவரிடம் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மோசடிக்காரர் அந்த மாதை போலியான சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் அதிகாரியிடம் பேசவைத்தார். அந்த அதிகாரி வங்கிக் கணக்கில் எஞ்சிய தொகை, இணைய வங்கி விவரங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை தொலைபேசி மூலம் மாதிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, தமது சேமிப்புகளை டிபிஎஸ் வங்கிக் கணக்கு ஒன்றுக்கு மாற்றிவிடும்படி அந்தப் போலி அதிகாரி மாதிடம் கேட்டுக்கொண்டார். அவர் $250,000 காசோலையை டிபிஎஸ் வங்கிக் கணக்கில் போட்டுவிட்டு, $40,000 மற்ற சில வங்கிக் கணக்குகளுக்கு மாற்றிவிட்டார்.
மோசடித் தடுப்பு நடவடிக்கைகளால் அந்த டிபிஎஸ் வங்கிக் கணக்கு சந்தேகத்துக்குரிய கணக்கு எனத் தெரிவிக்கப்பட்டது. அதனால் பரிவர்த்தனை நிறுத்தப்பட்டது. காவல்துறையின் மோசடித் தடுப்பு நிலையம், சிங்பாஸ் மோசடித் தடுப்புக் குழு, டிபிஎஸ் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இறுதியில் $250,000 மீட்கப்பட்டது.
அந்த டிபிஎஸ் கணக்கு 25 வயது மாதிற்குச் சொந்தமானது என்றும் 600 வெள்ளிக்காக தனது சிங்பாஸ் விவரங்களையும் வங்கிக் கணக்குகளையும் அவர் விற்றார் என்று காவல்துறை கூறியது.
அந்த 25 வயது மாது கைதுசெய்யப்பட்டார். விசாரணை தொடர்கிறது.

