தெம்பனிஸ், பாசிர் ரிஸ் - பொங்கோல் குழுத்தொகுதிகள் உட்பட குறைந்தது எட்டுத் தொகுதிகளில் பாட்டாளிக் கட்சி தொகுதி உலா மேற்கொண்டுள்ளது.
எதிர்வரும் தேர்தலில் நாடாளுமன்றத்தின் மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற இலக்கை அடையும் முயற்சியில் அந்தக் கட்சி ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாட்டாளிக் கட்சி சென்ற தேர்தலில் 21 வேட்பாளர்களைக் களமிறக்கியது. இம்முறை அது 30க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை நிறுத்த எண்ணம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது அதன் நீண்டகால இலக்கான நாடாளுமன்ற தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கைக் கைப்பற்றும் அதன் திட்டத்தை ஒத்திருப்பதாக கவனிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எதிர்வரும் தேர்தலில் எத்தனை வேட்பாளர்களை தான் களமிறக்கப்போகும் என்றோ எத்தனை தொகுதிகளில் தான் போட்டியிடக்கூடும் என்றோ பாட்டாளிக் கட்சி கூறவில்லை. மேலும், தனது புதிய வேட்பாளர்கள் பற்றிய கேள்விகளுக்கும் அதில் பதில் சொல்லவில்லை.
அல்ஜுனிட் - ஹவ்காங் நகரமன்ற மூத்த சொத்து மேலாளரான திரு அப்துல் முகைமின் என்பவர் புகைப்படங்களில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் காணப்படுகிறார். இவர் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி ஒன்றில் திரு லுவிஸ் சுவாவுடனும் தொகுதி உலாவில் பேராசிரியர் ஜேமஸ் லிம்முடனும் புகைப்படங்களில் தெரிகிறார்.
செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்றத்தில் ரயீசா கான் விட்டுச் சென்றுள்ள வெற்றிடத்தை திரு அப்துல் முகைமின் நிரப்பலாம் என்று கூறப்படுகிறது. திருவாட்டி ரயீசா கான் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமது நாடாளுமன்றப் பதவியை விட்டு விலகினார் என்பது நினைவுகூரத்தக்கது.
இன்னொரு உறுப்பினரான திரு லியோன் பெரேரா கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். இதுவும் அல்ஜுனிட் குழுத்தொகுதியில் வெற்றிடத்தை தோற்றுவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், தொழில்நுட்ப நிர்வாகியாகப் பணிபுரியும் ஜேக்சன் ஆவ் என்பவர், திரு பிரித்தம் சிங், திருவாட்டி சில்வியா லிம், திரு ஃபைசால் மனாப், திரு ஜெரால்ட் கியாம் ஆகியோருடன் இணைந்து தொகுதி உலாவில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.