2027ஆம் ஆண்டுக்குள் பேருந்துப் பயணிகள் ‘சிம்ப்ளிகோ’ பயன்பாட்டின் உதவியோடு பயணக்கட்டணம் செலுத்தியதை விரைவாகக் காணும் திட்டத்தை நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ) தொழில்நுட்பப் புதுப்பிப்பின் ஒரு பகுதியாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
பேருந்து ஓட்டுநர்கள் சாலைகளில் கவனம் செலுத்த உதவியாகத் தற்போது அவர்கள் நிர்வகிக்கும் இரண்டுத் திரைக்குப் பதிலாக ஒரே ஓர் ஒருங்கிணைந்த திரையை அமைக்கவும் எல்டிஏ திட்டமிட்டுள்ளது.
ஜூலை மாதத்தின் முற்பகுதியில் பேருந்துப் பயணச்சீட்டு வழங்கும் அமைப்பையும் பேருந்து மேலாண்மை அமைப்பையும் மாற்ற எல்டிஏ குத்தகை அறிவிப்பு வெளியிட்டது.
பேருந்துப் பயணச்சீட்டு வழங்கும் அமைப்பு 10 ஆண்டுகள் பழமையானது. மேலும், பேருந்து மேலாண்மை அமைப்பு ஏழு ஆண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பேருந்துகள், பேருந்துப் பணிமனைகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள கட்டணம் செலுத்தும் உபகரணங்கள் போன்ற வன்பொருள் அமைப்புகள் மாற்றப்படும் என்றும் புதியத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பின்நிலை அமைப்புகளின் செயல்பாடுகளும் மேம்படுத்தப்படும் என்றும் எல்டிஏ தெரிவித்தது.
இதற்கான பணிகள் 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்கி 2027ஆம் ஆண்டில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.