உலகின் மிகப்பெரிய கட்டடக்கலைத் திருவிழா நவம்பர் 6ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8ஆம் தேதி வரை மரினா பே சேண்ட்சில் நடைபெற்றது. கட்டடக்கலையில் வளர்ந்துவரும் நடைமுறைகளில் ஒன்றான நகர்ப்புற வடிவமைப்பில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் இவ்விழாவில் கலந்துகொண்டன.
இவ்விழாவில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் சீனா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்டவை முதல் ஐந்து இடங்களைப் பெற்றன.
சீனாவில் கட்டடக்கலையில் சிறந்து விளங்கும் 50 நிறுவனங்களும், சிங்கப்பூரிலிருந்து 20 நிறுவனங்களும் இந்தியாவைச் சேர்ந்த 18 நிறுவனங்களும் இவ்விழாவில் கலந்துகொண்டன.
71 நாடுகளிலிருந்து ஏறக்குறைய 350 நிறுவனங்களின் 480க்கும் மேற்பட்ட அதிநவீன வடிவமைப்புகள் இவ்விழாவில் காட்சிப்படுத்தப்பட்டன.
போட்டிகள் கட்டங்களாக நடத்தப்பட்டன. ஒவ்வொரு நாளின் முடிவிலும் சிறந்த வடிவமைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறுதிப் போட்டிக்கு அனுப்பப்பட்டன.
மூன்று நாள் நடந்த இவ்விழாவில் கடைசி நாளில், 42 பிரிவுகளைச் சேர்ந்த வெற்றியாளர்கள் இவ்வாண்டின் உலகில் தலைசிறந்த கட்டடம், ஆண்டின் சிறந்த உள்கட்டமைப்பு உள்ளிட்ட நான்கு விருதுகளுக்காகப் போட்டியிட்டனர்.
முக்கிய உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் புதுமையான வடிவமைப்புகளைக் கொண்டாடும் எட்டு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன.