எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சி பொதுத் தேர்தலுக்கான பிரசார முழக்கவரியைச் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) வெளியிட்டுள்ளது.
தேர்தல் தினம் குறித்த தகவல் வெளியானவுடன் ‘சிங்கப்பூருக்கு உழைக்கிறோம்’ (Working for Singapore) என்ற முழக்க வரியைப் பாட்டாளிக் கட்சி வெளியிட்டது.
தேர்தலுக்கான முழுக்க வரிகள் மாறலாம் ஆனால் கட்சியின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று அது தெரிவித்தது.
“வேற்றுமையில் தான் ஒற்றுமை உள்ளது, பலதரப்பு மக்களைக் கொண்ட சிங்கப்பூரர்களின் குரல்களைப் பிரதிநிதிக்க நாடாளுமன்றத்தில் இருப்போம்,” என்று பாட்டாளிக் கட்சி அதன் சமூக ஊடகக் கணக்குகளில் தெரிவித்தது.
“வாக்காளர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் 2020ஆம் ஆண்டு வெற்றி இல்லை. வாக்காளர்களின் ஆதரவால் எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அதிகமாக இடம்பெற்று வரலாறு படைத்தோம்,” என்று அக்கட்சி குறிப்பிட்டது.
“2020ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டுவரை தங்கள் கட்சியின் ஆலோசனைகளை அரசாங்கம் கேட்டது. எதிர்க்கட்சியாகச் சிறப்பாகச் செயல்பட்டோம், இருப்பினும் வேலை இன்னும் முடியவில்லை. சிங்கப்பூருக்காகத் தொடர்ந்து உழைப்போம், பொதுமக்கள் அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும்,” என்று அது தெரிவித்தது.
இந்நிலையில், பாட்டாளிக் கட்சி காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அதில் அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரித்தம் சிங், சில்வியா லிம், ஃபைசல் மனாப், ஜெரால்ட் கியாம், செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜேமஸ் லிம், லூயிஸ் சுவா, ஹி டிங் ரூ, ஹவ்காங் தனித்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டெனிஸ் டான் என அதன் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் காணொளியில் இருந்தனர்.