யாகிப் புயல், வெள்ளம் ஆகியவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மியன்மார் நாட்டுக்கு உதவும் வகையில், சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் $50,000 மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை அளிக்க உறுதியளித்துள்ளது.
இது தொடர்பாக இச்சங்கம் வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 20) வெளியிட்ட அறிக்கையில் இத்தகவலைத் தெரிவித்துள்ளது.
யாகிப் புயலால் பாதிக்கப்பட்டுள்ள வியட்னாம், லாவோஸ் ஆகிய நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் வழங்கத் தலா $50,000 மதிப்புள்ள நிவாரணப் பொருள்கள் அளிப்பதாக முறையே ஆகஸ்ட் 29ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதி இச்சங்கம் அறிவித்தது.
அதற்குப் பிறகு இதுவே இச்சங்கத்தின் அண்மைய பங்களிப்பாகும்.
மியன்மாரில், புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள், சுத்தமான குடிநீர், சுகாதாரக் கருவிகள், பிற அத்தியாவசியப் பொருள்கள் ஆகியவற்றை வழங்க இருப்பதாக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் கூறியது.
சுத்தமான குடிநீருக்கான அவசரத் தேவையின் காரணமாக, வரும் வாரங்களில் நீர் வடிகட்டிகள் அனுப்பப்படும் என்றும் இச்சங்கம் தெரிவித்தது.