யுவபாரதி அனைத்துலகப் பள்ளிக்கு ‘சாம்பியன்ஸ் ஆஃப் குட்’ விருது

நற்பண்புக்கும் சமுதாய சேவைக்கும் அங்கீகாரம்

யுவபாரதி அனைத்துலகப் பள்ளிக்கு ‘சாம்பியன்ஸ் ஆஃப் குட்’ விருது

2 mins read
d8ae9c42-f94f-4a42-8097-b49f049f1a86
துணைப் பிரதமர் கான் கிம் யோங்கிடமிருந்து ‘சாம்பியன்ஸ் ஆஃப் குட்’ விருதைப் பெற்றுக்கொள்ளும் யுவபாரதி அனைத்துலகப் பள்ளி இயக்குநர் லதா மோகன்குமார். - படம்: என்விபிசி
multi-img1 of 2
Google News Preferred Icon

கல்விச் சாதனைகளைத் தாண்டி, சமுதாயப் பொறுப்புணர்ச்சியையும் நற்பண்புகளையும் மாணவர்களிடம் இளம் வயதிலிருந்தே விதைத்துவரும் யுவபாரதி அனைத்துலகப் பள்ளிக்கு (ஒய்பிஐஎஸ்) தேசியத் தொண்டூழியம், அறக்கொடை நிலையத்தின் உயரிய விருதான ‘சாம்பியன்ஸ் ஆஃப் குட்’ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.  

விருது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பள்ளியின் இயக்குநர் லதா மோகன்குமார், “புத்தகப் படிப்பு மட்டும் போதாது. பிறர் துயர் தீர்க்கும் கருணை உள்ளமும் வேண்டும். அது மாணவர்களின் குணநலன்களையும் சமுதாயப் பொறுப்பையும் செதுக்க வேண்டும். 

‘‘எங்கள் பள்ளியில் பாலர் பருவத்திலிருந்தே இரக்கம், மரியாதை, அனைவரையும் அரவணைக்கும் மனப்பான்மை ஆகியவற்றை மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறோம்,’’ என்றார்.

தங்கள் கல்வி நிறுவனம் கொண்டிருக்கும் சமுதாயக் கடப்பாட்டை உறுதிப்படுத்துவதாக இந்தத் தருணம் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட திருவாட்டி லதா, இந்த விருது பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், சமுதாயப் பங்காளிகள் என அனைவரும் இணைந்து உழைத்த உழைப்பிற்கு கிடைத்த வெற்றி,” என்று விவரித்தார்.

இளம் வயதிலேயே சமுதாய அக்கறை

இவ்விருது எவ்வளவு அர்த்தமுள்ளது என்பது குறித்துப் பேசிய அவர், மாணவர்களின் சிந்தனைத் திறன், படைப்பாற்றலை ஊக்குவிக்க, பல்வேறு திட்டங்கள் பள்ளியில் செயல்படுத்தப்படுவதாகவும் எதிர்காலத் தொழில்நுட்ப மாற்றங்களுக்கேற்ப மாணவர்கள் தயார்ப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

முன்னர் கிடைத்த ‘நல்லதொரு நிறுவனம்’ உள்ளிட்ட இதர விருதுகளைத் தொடர்ந்து தற்போது ‘சாம்பியன்ஸ் ஆஃப் குட்’ விருது கிடைத்துள்ளது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், தங்களின் சிறந்த சமூகப் பங்களிப்பிற்காக 63 ‘சாம்பியன்ஸ் ஆஃப் குட்’ நிறுவனங்கள் உட்பட மொத்தம் 481 அமைப்புகள் அங்கீகரிக்கப்பட்டன.

விருது குறித்துக் கருத்துரைத்த தேசியத் தொண்டூழியம், அறக்கொடை நிலையத்தின் கூட்டாண்மை தொழில்துறைப் பங்காளித்துவப் பிரிவின் இயக்குநர் லின் சுஃபே, யுவபாரதி பள்ளிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

“மக்கள், சமூகம், நிர்வாகம், சுற்றுச்சூழல், பொருளியல் ஆகிய பரிமாணங்களில் வெளிப்படுத்திய ஆழ்ந்த தொடர்ச்சியான அர்ப்பணிப்புதான், ‘சாம்பியன்ஸ் ஆஃப் குட்’ அமைப்புகளை மற்றவற்றிலிருந்து தனித்துக்காட்டுகிறது.

“சமூகத்திலும் தங்கள் பங்காளிகளிடையேயும் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்த நிறுவனங்கள் தங்கள் பலத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கு இவர்கள் சிறந்த எடுத்துக்காட்டு.

“மற்ற நிறுவனங்களும் தங்கள் சமூக இலக்கை நோக்கிய பயணத்தைத் தொடங்க இது ஊக்கமளிக்கும்,” என்று திருமதி லின் சுஃபே பாராட்டினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்