அண்மையில் ‘இயோஸ்’ பான நிறுவனத்தின் சில ‘கிரிசாந்தமம்’ நேநீர்ப் புட்டிகளைத் திறந்தபோது அவை தோற்றத்திலும் சுவையிலும் குழாய் நீரைப் போலவே இருந்ததைக் கண்ட மாது ஒருவர் அதிர்ச்சி அடைந்தார்.
திருவாட்டி ஸெங், 58, சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக பிப்ரவரி 1ஆம் தேதி ‘வைட் சேண்ட்ஸ்’ கடைத்தொகுதியில் உள்ள ‘ஃபேர்பிரைஸ்’ பேரங்காடியிலிருந்து 24 ‘கிரிசாந்தமம்’ தேநீர்ப் புட்டிகள் பெட்டியை வாங்கியதாக ஷின்மின் செய்தித்தாள் கூறியது.
மூன்று புட்டிகளைத் திறந்தபின் அவற்றுள் இருந்த பானம் நிறமில்லாமலும் சுவையில்லாமலும் இருந்தது. அதனால் எஞ்சிய புட்டிகளை பேரங்காடிக்கே திருப்பி அனுப்ப அவர் முடிவெடுத்தார்.
திருவாட்டி ஸெங்கின் புகாரைத் தொடர்ந்து, நிறுவனம் தனது சொந்த விசாரணையை மேற்கொண்டதாக ‘இயோஸ்’ நிறுவனப் பேச்சாளர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
“உற்பத்திச் செயல்முறையின்போது வழக்கமற்ற தொழில்நுட்பக் குறைபாடு ஏற்பட்டதை அந்த விசாரணையின்போது அடையாளம் கண்டோம்,” என்று அந்தப் பேச்சாளர் கூறினார். அது தனிப்பட்ட ஒரு சம்பவம் என்றும் அவர் தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்காக நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்,” என்றார் அவர்.