இயோ சூ காங் வட்டாரத்தில் வியாழக்கிழமை (ஜூன் 25) நடந்த விபத்தில் மோட்டார்சைக்கிளை ஓட்டிச்சென்ற 25 வயது ஆடவரும் பின்னிருக்கையில் பயணம் செய்த அவரது 21 வயதுத் தோழியும் உயிரிழந்தனர்.
அந்த மோட்டார்சைக்கிள் சறுக்கிச் சென்றதாக நம்பப்படுகிறது.
அப்பர் தாம்சன் ரோட்டை நோக்கிச் செல்லும் இயோ சூ காங் ரோட்டில் நடந்த விபத்து குறித்து அதிகாலை 3.35 மணிக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
இருவரும் சம்பவ இடத்திலேயே மாண்டுவிட்டதாக குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ உதவியாளர் கூறினார். உயிரிழந்த இருவரும் காதலர்கள் என்று நம்பப்படுவதாக ஷின் மின் நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட காணொளியில் சாலையின் இரு தடங்களில் ஒன்றில் காவல்துறை தடுப்புகள் அமைத்திருந்ததையும் அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையும் காண முடிகிறது. சாலையின் இடது தடத்தில் காவல்துறையின் நீல நிறக் கூடாரம் அமைக்கப்பட்டிருந்ததையும் அது காட்டியது.
விபத்து குறித்து விசாரணை தொடர்வதாகக் காவல்துறை தெரிவித்தது.

