பாசிர் ரிஸ் கடற்கரையில் நீர் விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது மின்னல் தாக்கியதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இளையர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுயநினைவின்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்பட்ட 24 வயது ஆடவர் இறந்துவிட்டார் என காவல்துறை திங்கட்கிழமை (ஜூலை 6) காலை தெரிவித்தது.
அந்த மரணத்தில் சதிச்செயலுக்கான சந்தேகம் இல்லை என ஆரம்பகட்ட விசாரணை தெரிவிப்பதாகவும் சம்பவம் குறித்து விசாரணை தொடருவதாகவும் அது குறிப்பிட்டது.
நீர் விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது மின்னல் தாக்கியதாகக் கூறப்பட்ட இதர ஏழு பேரும் சுயநினைவோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அவர்கள் 13 வயதுக்கும் 54 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
கடற்கரையில் படகோட்டம், துடுப்புப் பலகை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது அவர்களை மின்னல் தாக்கியதாக நம்பப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) 131 பாசிர் ரிஸ் ரோட்டில் நிகழ்ந்த சம்பவம் குறித்து அன்றைய தினம் மாலை 4.50 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்திருந்தது.
பாதிக்கப்பட்டவர்களில் நால்வர் சுயநினைவுடன் செங்காங் பொது மருத்துவமனைக்கும் இரு பிள்ளைகள் கேகே மகளிர், குழந்தைகள் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

