சிறார் பாலியல் குற்றவாளியான அமோஸ் யீயுடன் கைகலப்பில் ஈடுபட்ட ஓர் இளையரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற அனிமே எனும் உயிரோவியக் கண்காட்சியில் சனிக்கிழமை (மே 9) இந்தச் சம்பவம் நடைபெற்றது.
அங்கு நடைபெற்ற சம்பவம் குறித்து பிற்பகல் 2.15 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் கூறினர்.
அங்கு சென்ற அதிகாரிகள், சிறு காயத்துடன் இருந்த 27 வயது நபரை 18 வயது இளையர் தாக்கியதை உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து அந்த 18 வயது இளையர் பொது இடத்தில் தொந்தரவு விளைவித்ததாகக் கைது செய்யப்பட்டார்.
காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.
உள்நாட்டு அனிமே மாநாடான டௌஜிமா மாநாடு மே 9, 10 தேதிகளில் நடைபெறுகிறது.
மே 9ஆம் தேதி சமூக ஊடகத்தில் பரவிய காணொளி ஒன்றில் ஒருவரை ஓர் இளையர் குத்தி, எட்டி உதைத்துத் தாக்குவதைக் காண முடிகிறது. பலர் அந்தச் சம்பவத்தை பார்த்தவாறு செல்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
பிற்பகல் 2.26 மணியளவில் எக்ஸ் தளத்தில் கீழ் உதடு, விரல்களில் ஏற்பட்ட காயத்தைக் காட்டும் தனது படத்தை அமோஸ் யீ வெளியிட்டிருந்தார். அதில் மாநாட்டில் தாக்கப்பட்டேன், உதட்டில் ரத்தம் வழிகிறது என்று அவர் குறிப்பு எழுதியிருந்தார்.

