நார்த் பிரிட்ஜ் ரோட்டில் அருகருகே உள்ள இரு உணவங்களுக்கிடையே நிலவிய எதிர்ப்புணர்வால், 2015ல் விக்டரி உணவகத்தின் உரிமையாளர் தாக்கப்பட்டு அவரது முகத்தில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன.
நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு அத்தாக்குதலுக்குத் திட்டமிட்ட 'ஸாம் ஸாம்' உணவகத்தின் முன்னாள் இயக்குநரான 49 வயது ஸக்கீர் அப்பாஸ் கான், அவரது 50 வயது நண்பரான அன்வார் அம்பியா காதிர் மைதீன் ஆகியோர் சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் சேர்ந்து விக்டரி உணவகத்தின் மேலதிகாரியான லியாகத் அலி முகம்மது இப்ராஹிமைத் தாக்க முடிவெடுத்து, ஜோஷுவா நவிந்திரன் சுரேந்திரன் என்ற ரகசிய கும்பல் உறுப்பினரை அப்பணிக்கு அமர்த்தினர்.
லியாகத் 2015ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி இரவு 10 மணிக்கு தாக்கப்பட்டார்.
தாக்குதலை மேற்கொண்ட ஜோஷுவாவுக்கு 2016 நவம்பர் மாதத்தில் ஆறரை ஆண்டு சிறையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
ஸாம்ஸாம் உணவகத்தில் திரு ஸக்கீருடன் வர்த்தகப் பங்காளிகளாக இருந்த லியாகத், 2014ல் அங்கிருந்து விலகி, விக்டரி உணவகத்தில் சேர்ந்து, 'ஸாம் ஸாம்' உணவகத்தின் வாடிக்கையாளர்களை விக்டரி உணவகம் பக்கம் இழுத்தார் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
இந்தச் சச்சரவு முற்றிப்போக, 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி போலிஸ் அங்கு வந்து வாடிக்கையாளர்களை இழுக்கும் செயலைக் கைவிடுமாறு இரு உணவகங்களைக் கேட்டுக்கொண்டது.
அதன் பின்னர் கோபமடைந்த ஸக்கீர், “ஒரு வாரத்துக்குள் உன்னைத் தாக்குவேன் அல்லது கொல்வேன்,” என்று லியாகத்திடம் சூளுரைத்தார் என்றும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
#ஸாம்ஸாம் #விக்டரி #நார்த் பிரிட்ஜ்ரோடு #சிங்கப்பூர்