ஃபைஷால் இப்ராஹிம் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபராக ஒரு பெண் தவறாக அடையாளப்படுத்தப்பட்டு, பொய்க் குற்றச்சாட்டுகளுக்கும் அவதூறான கருத்துகளுக்கும் ஆளாகியுள்ளார் என்று முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஸாக்கி முகம்மது தெரிவித்துள்ளார்.
ஆதாரமற்ற ஊகங்களின் காரணமாக எந்தவோர் அப்பாவி நபரும் இதுபோன்ற தொல்லைகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படக்கூடாது என்று திங்கட்கிழமை (ஜூலை 27) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் திரு ஸாக்கி குறிப்பிட்டார்.
தவறாகக் குற்றஞ்சாட்டப்பட்ட உடற்பயிற்சிப் பயிற்றுவிப்பாளர் ரசிடா கௌடல் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
அந்தப் பதிவில், ஃபைஷாலுடன் தமக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்று ரசிடா கூறியுள்ளார்.
அடையாளம் தெரியாத பெண் ஒருவருடன் முறையற்ற வழியில் தொடர்புகொண்டதால், ஃபைஷால் அரசியலில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து, ஜூலை 20ஆம் தேதி திரு ஸாக்கி, முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
“அண்மைய நிகழ்வுகளால் ஏற்பட்ட காயத்தையும் ஏமாற்றத்தையும் நம்மில் பலர் இன்னும் ஏற்றுக்கொள்ள முயன்றுவருகிறோம். ஆனால், அதற்காக நாம் மற்றவர்களுக்கு அதே வேதனையை ஏற்படுத்தக்கூடாது,” என்றார் அவர்.
ஃபைஷாலிடமும் அவரது குடும்பத்தினரிடமும் பொதுமக்கள் தொடர்ந்து பரிவும் மரியாதையும் காட்டுவார்கள் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

