மூதாதையர்கள் மொழி, கலாசாரம் வழியாக தங்களுக்குப் பின் வரும் தலைமுறையினருடன் உரையாடி வருகின்றனர் எனக் கருதுவதாகக் கூறுகிறார் திரு விக்னேஷ் சுந்தரேசன், 32 (படம்).
அண்மையில் $69 மில்லியன் அமெரிக்க டாலர் (S$93 மில்லியன்) மதிப்புடைய மின்னிலக்க நாணயம் கொண்டு, உலகிலேயே ஆக விலை உயர்ந்த ஒரு மின்னிலக்கக் கலைப்படைப்பை வாங்கி உலகையே தம்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த சிங்கப்பூர் தொழில்முனைவர் இவர்.
"திருக்குறளைத் தமிழில் படித்தால் திருவள்ளுவரே என்னிடம் பேசுவதுபோல இருக்கும். தமிழ் மொழியை இழந்துவிட்டால் திருவள்ளுவர் எப்படி என்னிடம் பேசுவார்? மொழிபெயர்த்துச் சொல்லும்போது அது மொழிபெயர்த்தவரின் கருத்தாகிவிடும், திருவள்ளுவரின் கருத்தாக இராது.
"ஒரு மொழியை இழக்கும்போது மூதாதையருடன் பேசும் வாய்ப்பை இழக்கிறோம். அந்த இழப்பு எனக்கு ஒரு பொருளியல் பிரச்சினையாகத் தெரிகிறது," என்று திரு விக்னேஷ் சொன்னார்.
தமிழுக்கு ஒரு பொருளியல் தேவை இல்லை என்றால் அது அழிய நேரிடும் என்று குறிப்பிட்ட திரு விக்னேஷ், மெய்நிகர் உலகில் தமிழுக்கென ஒரு நினைவுச்சின்னத்தை உருவாக்கத் திட்டமிட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
மெய்நிகர் நிலத்தில் ஒன்பது நினைவுச் சின்னங்களை எழுப்பிய பின்னர் பத்தாவதாகத் தமிழ் மொழிக்கும் ஒரு நினைவுச் சின்னத்தைக் கட்டியெழுப்பவுள்ளார் இவர்.
2013ஆம் ஆண்டில் இருந்து மின்னிலக்க நாணய வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் திரு விக்னேஷ், முதலீடு செய்வதைத் தவிர்த்து மெய்நிகர் உலகில் நிலச்சொத்துகளையும் வாங்கி வைத்துள்ளார்.
"வெளியிலிருந்து பார்க்கும்போது மின்னிலக்க நாணயம் ஏதோ ஒரு முதலீடு தொடர்பான விஷயமாகத்தான் தெரியும். ஆனால், அதையும் தாண்டி ஒரு சமூகத்தையே உருவாக்கும் தன்மை அதற்கு உண்டு. ஒரு கோவிலைக் கட்டுவது பொருளீட்டுவதற்கு அல்ல, அமைதியைத் தேடுவதற்கு. அதைப் போன்ற ஓர் இடமாக மெய்நிகர் உலகத்தைப் பார்க்கிறேன். அமெரிக்காவில் வசிக்கும் ஒரு 12 வயதுப் பையன் இந்தியாவில் வாழும் ஒருவரை இந்த மெய்நிகர் உலகத்தில் சந்திக்கலாம், தமிழ் கற்கலாம்," என்கிறார் இவர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விக்னேஷ் 2017ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் குடியேறினார். 'போர்ட்கீ டெக்னாலஜிஸ்' (Portkey Technolo gies) என்ற நிறுவனத்தை தம் கூட்டாளி திரு ஆனந்த் வெங்கடேஸ்வரனுடன் இவர் தொடங்கினார். பல்வேறு தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதுடன் மின்னிலக்க நாணயம், மின்னிலக்கக் கலை ஆகிய துறைகளிலும் அந்நிறுவனம் ஈடுபடுகிறது.
"தமிழ்நாட்டில் மின்னிலக்க நாணயம் குறித்து எதிர்ப்பு வந்த தால் வேறொரு நாட்டிற்குச் செல்ல முடிவு செய்தேன். காலையில் எழுந்தால் எனக்கு இட்லி சாப்பிட வேண்டும். அதனால் தமிழர்கள் வாழும் சிங்கப்பூருக்கு வர முடிவுசெய்தேன்," என்றார் இவர்.
தமிழ்மொழி தொடர்ந்து நிலைத்திருக்க மெய்நிகர் உலகம் வழிவகுக்கும் என்று திரு விக்னேஷ் நம்பிக்கை கொண்டுள்ளார்.
"ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் வந்தபோது, அதையெல்லாம் பயன்படுத்தக்கூடாது என்று மக்கள் சொன்ன காலம் நினைவில் உள்ளது.
"கைபேசியைக் கண்டுபிடித்தவரே இணையம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. அப்படியே மாறிவிட்டது. மின்னிலக்க நாணயத்திற்கும் எதிர்காலம் உள்ளது என்று நம்புகிறேன்," என்றார் திரு விக்னேஷ்.

