புக்கிட் தீமா விரைவுச்சாலையில் கடந்த பிப்ரவரி மாதம் மணிக்கு 141 கிலோமீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருந்த ஓட்டுநர் ஒருவர் மோட்டார்சைக்கிள் ஒன்றை மோதித் தள்ளியதில், மோட்டார்சைக்கிள் ஓட்டுநரும் அவருடன் சென்றுகொண்டிருந்தவரும் சாலையில் விழுந்தனர்.
வாகனத்தை நிறுத்துவதற்குப் பதிலாக, புவா யுயி லூன் என்ற அந்த ஓட்டுநர் தாம் தங்கியிருந்த ஜோகூர் பாருவுக்குத் தப்பிச் சென்றார்.
விபத்து நடந்த இடத்திலேயே ஜோஷுவா சியாம் சீ வாய் என்ற 22 வயது மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்.
மோட்டார்சைக்கிளில் அவருடன் சென்ற அவரது காதலி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
புவா மறுநாள் சிங்கப்பூர் திரும்பியதும் கைது செய்யப்பட்டார்.
மலேசியாவைச் சேர்ந்த 28 வயது புவாவிற்கு மூன்று ஆண்டுகள், பத்து மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதோடு, வாகனம் ஓட்ட அவருக்குப் பத்தாண்டுத் தடையும் விதிக்கப்பட்டது.
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாகத் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை புவா ஒப்புக்கொண்டார்.
தீர்ப்பு வழங்கப்பட்டபோது மேலும் ஐந்து குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

