செல்வங்களில் தலையாயது மக்கட்பேறு. அப்படி வரமாக வந்த மகள் அரிதான நோயால் பாதிக்கப்பட்டிருக்க, அருமை மகளை எப்பாடுபட்டேனும் காப்பாற்ற அவளின் பெற்றோர் நடத்திய பெரும் போராட்டத்திற்கு, முன்பின் அறிந்திராத இளையர் ஒருவர் தமது கல்லீரலைத் தானமாகத் தந்து கைகொடுத்துள்ளார்.
இன்னும் இரண்டு வயதே ஆகாத ரியா தமக்கு யார் என்றே தெரியாதபோதும் அரியவகை நோயால் போராடி வந்த அவளைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே சக்திபாலன் பால தண்டாயுதத்தின் சிந்தனையில் ஓடியது. சற்றும் தாமதியாது, ரியா குறித்து தாம் அறிந்த அந்த நாளே அவளுக்குத் தமது கல்லீரலைத் தானமாக வழங்க முன்வந்தார் 28 வயதான சக்திபாலன்.
நல்வாய்ப்பாக, அவரது கல்லீரலும் ரியாவிற்குப் பொருத்தமானது என மருத்துவச் சோதனையில் தெரியவர, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முடிந்து, இப்போது குழந்தை ரியாவும் தானமளித்த திரு சக்தியும் நலமாக உள்ளனர்.
பிறந்து 40 நாள்களிலேயே பத்து மணி நேர அறுவை சிகிச்சை
மணவாழ்வில் நுழைந்த ஜெ.சுனில், 31 - ச. ருத்ரா, 30, தம்பதியருக்கு அன்புப் பரிசாக 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் அழகு தேவதை ரியா பிறந்தாள்.
பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை வருவது இயல்பு. அதன் தொடர்பில் பலதுறை மருந்தகத்திற்கு மூன்று வாரங்களாக ரியாவை அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.
மஞ்சள் காமாலை தொடர்ந்து நீடிக்கவே, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாள் அந்தக் கைக்குழந்தை.
அங்கு சில மருத்துவச் சோதனைகளுக்குப் பிறகு, ரியாவுக்கு பித்த நாள அடைப்பு (பிலியரி அட்ரீசியா) எனும் அரியவகை கல்லீரல் நோய் இருப்பது தெரியவந்தது.
கைக்குழந்தைகள் அந்நோயால் பாதிக்கப்பட்டால், கல்லீரலிலுள்ள பித்த நாளங்கள் அழன்று, அடைப்பு ஏற்பட்டு, அதனால் பித்தநீர் பித்தப்பைக்குச் செல்வது தடைபடும். நாளடைவில் கல்லீரலே செயலிழந்துவிட வாய்ப்புண்டு.
இதனால், பிறந்த 40 நாள்களிலேயே பித்தநீர் ஓட்டத்தைச் சீராக்க ரியாவிற்கு 10 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பிள்ளைப்பேறு கிட்டிய மகிழ்ச்சியில் திளைத்த பெற்றோர், பிஞ்சுக்குழந்தையின் உடலில் சிகிச்சைக்காகக் குழாய்கள் பொருத்தப்படும் காட்சிகளைக் கண்டு மனம் கலங்கிப் போயினர்.
அறுவை சிகிச்சை முடிந்தபின்னும் நிம்மதியில்லை. ஏனெனில், அறுவை சிகிச்சையால் பித்தநீர் ஓட்டத்தை ஓரளவு மட்டுமே சீராக்க முடிந்தது என்றும் நீண்டகாலத் தீர்வாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ரியாவுக்கு தேவைப்படும் என்றும் மருத்துவர்கள் கூறினர்.
தானம் தரத் தயாரான தந்தை
கடந்தாண்டு தொடக்கத்தில் தம் மகளுக்குத் தாமே கல்லீரல் தானம் அளிப்பது என்று திரு சுனில் முடிவு செய்தார்.
கல்லீரல் ரியாவிற்குப் பொருத்தமாக இருக்கும் சாத்தியத்தை அதிகரிக்க, தமது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று திரு சுனிலிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முறையாக உணவுண்டு, உடற்பயிற்சி செய்து, ஆறு மாதங்களில் 12 கிலோ எடை குறைத்து, கல்லீரல் பொருத்தச் சோதனைக்கு சென்றார் ஆய்வக அதிகாரியாகப் பணி புரியும் திரு சுனில்.
ஒரே இரத்தப் பிரிவு என்பதால் தமது கல்லீரல் ரியாவிற்குப் பொருத்தமாக இருக்கும் என்று நம்பிக்கையோடு இருந்த திரு சுனிலுக்கு ஏமாற்றம்.
தமது கல்லீரல் பொருத்தமில்லை என்று திரு சுனிலிடம் 2020 ஜூன் மாதம் தெரிவிக்கப்பட, உடனடியாக சமூக வலைத்தளங்களில் ரியாவின் மருத்துவப் பிரச்சினைகளை பகிர்ந்து, கல்லீரல் தானம் செய்ய முன்வருமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
வசந்தம் கலைஞர்களும் இத்தேடல் முயற்சிக்கு ஆதரவாக திரு சுனிலின் குடும்பத்தைக் காணொளிவழி நேர்கண்டு, அதனைச் சமூக ஊடகங்களில் பதிவேற்றி, பரவச் செய்தனர்.
ஆர்வம் தெரிவித்த 99 பேர்
அதன்பின் மூன்று வாரங்களுக்குள் சிங்கப்பூரில் மட்டும் கிட்டத்தட்ட 99 பேர் ரியாவுக்கு கல்லீரல் தானமளிக்க ஆர்வம் தெரிவித்தனர்.
அவர்களில் இருந்து ஆரோக்கியமானவர்களைக் கண்டறியும் முதற்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டார் திரு சுனில். அடுத்ததாக, அவர்களுக்கு மருத்துவச் சோதனை செய்ய வேண்டி இருந்தது.
ஒருவரது சோதனைக்கு திரு சுனில் சராசரியாக $2,500 செலுத்த வேண்டியிருந்தது.
அதையடுத்து, அடுத்து மேற்கொள்ளப்படவிருந்த கல்லீரல் மாற்று சிகிச்சைக்கு ‘கிவ் ஏஷியா’ இணையத்தளத்தின் வழியாக இரண்டு வாரத்திற்குள் $55,000 நிதி திரட்டப்பட்டது.
மூன்று மாதத் தேடலில், கிட்டத்தட்ட பத்துப் பேரைச் சோதித்ததில், ஜப்பானிய நிறுவனம் ஒன்றில் துணைத் திட்ட அதிகாரியாகப் பணியாற்றும் திரு சக்தியின் கல்லீரல் ரியாவிற்குப் பொருத்தமானது எனத் தெரியவந்தது.
“சிகிச்சைக்குமுன், யார் தானம் செய்யப்போகிறார் என்ற தகவல் பகிரப்படாது. ரியாவும் தானம் செய்பவரும் சிகிச்சையை வெற்றிகரமாக கடந்து வரவேண்டும் என்று குடும்பமே பிராத்தித்தோம்,” என்றார் அரசாங்க ஊழியரான திருமதி ருத்ரா.
2020 செப்டம்பர் 30ஆம் தேதி திரு சக்தியின் கல்லீரலில் இருந்து 23% வெட்டி எடுக்கப்பட்டு, ரியாவிற்குப் பொருத்தப்பட்டது.
மருத்துவமனையில் இருந்து நான்கு நாள்களில் வீடு திரும்பிய திரு சக்தி, மூன்று மாதங்களில் தமது வழக்கமான நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டார். குழந்தை ரியாவும் சீராகக் குணமடைந்து வருகிறாள்.
இப்போது திரு சக்தியும் அந்தக் குடும்பத்தில் ஒருவர்போல் ஆகிவிட்டார்.
இறந்தபின் தங்களது உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்துள்ள சுனில்-ருத்ரா தம்பதி, பிறரும் அவ்வாறே செய்வர் என நம்புகின்றனர்.
===============================================================================================================================================================
மனித உறுப்பு மாற்றுச் சட்டம்
மனித உறுப்பு மாற்றுச் சட்டத்தின்கீழ், ஒருவர் இறந்த பிறகு, அவரின் கல்லீரல், இதயம், சிறுநீரகம், விழிவெண்படலம் (cornea) போன்றவை உடலிலிருந்து அகற்றப்பட்டு, உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படலாம்.
இச்சட்டம் 21 வயதும் அதற்கு மேற்பட்ட, மனநோய் இல்லாத அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தர வாசிகளுக்கும் பொருந்தும்.
அவர்கள் இத்திட்டத்தில் தானாகவே சேர்க்கப் படுவர். அதிலிருந்து விலக விரும்பினால் அதற்குரிய படிவத்தை தேசிய உறுப்பு மாற்று சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்ப வேண்டும்.
இந்தச் சட்டம் நடப்பில் இருந்தாலும், இறந்தவர்களிடமிருந்து உறுப்பு தானம் பெறுவது குறைவாகவே உள்ளது. இதற்குச் சில காரணங்கள் இருக்கலாம்.
எடுத்துக்காட்டாக, ஒருவர் இறப்பதற்கு முன், அதுகுறித்த விருப்பத் தெரிவுகளை நெருக்கமானவர்களிடம் பகிராமல் போய் இருந்தால், தானம் செய்ய முன்வராததற்கு குடும்பத்தினர் காரணங்களைக் கூறலாம்.
===============================================================================================================================================================
பித்த நாள அடைப்பும் கல்லீரல் தானமும் - விளக்கம்
பித்த நாள அடைப்பு (Biliary Atresia) நோயுடன் பிறக்கும் குழந்தைகள் தொடக்கத்தில் ஆரோக்கியமாக இருந்தாலும் மஞ்சள் காமாலை நோய் அதற்கான முதல் அறிகுறியாகத் தென்படும். குழந்தைக்கு இரு வாரங்களுக்கு மேல் மஞ்சள் காமாலை நீடித்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். குழந்தைகளின் மல நிறத்தையும் கண்காணிக்க வேண்டும். இது மஞ்சள் காமாலை உள்ள குழந்தைகளுக்கு மட்டுமல்ல, எல்லாக் குழந்தைகளுக்கும் பொருந்தும். மலம் வெள்ளையாக இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. அத்துடன், சிறுநீரும் கறுமை நிறத்தில் இருக்கும்.
ஓராண்டில் சிங்கப்பூரில் எத்தனை குழந்தைகள் பித்த நாள அடைப்பால் பாதிக்கப்படுகின்றன? பெண் பிள்ளைகளை இந்நோய் அதிகம் பாதிக்குமா?
சிங்கப்பூரின் சராசரி பிறப்பு விகிதத்தைக் கருத்தில்கொள்ளும்போது ஆண்டுதோறும் சராசரியாக மூன்று குழந்தைகள் இந்நோயால் பாதிக்கப்படுகின்றன எனக் கூறலாம். ஆண் குழந்தைகளைவிட பெண் பிள்ளைகளை இது அதிகம் தாக்கக்கூடும் எனப் பல ஆய்வுகள் கூறுகின்றன.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான இடர் மதிப்பீடு (risk assessment) எப்படிச் செய்யப்படுகிறது? அறுவை சிகிச்சையின் வெற்றி வாய்ப்பு எப்படி?
சிறுநீர், ஊடுகதிர்ப் பரிசோதனை எனப் பல சோதனைகளுக்குப் பிறகே குழந்தைகள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவர். உலகளவிலான புள்ளிவிவரங்களைக் காண்கையில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முடிந்த ஓர் ஆண்டிற்குப் பிறகான காலத்தில் 90% நிலைத்திருக்கும் விகிதம் புலப்படுகிறது. சிங்கப்பூர் பொது மருத்துவமனைகளில், தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை மட்டுமே சிறாருக்கான கல்லீரல் அறுவை சிகிச்சையை மேற்கொள்கிறது.
கல்லீரல் தானம் செய்ய முன்வருபவர் எத்தகைய மருத்துவச் சோதனைகளுக்கு உட்பட வேண்டி இருக்கும்?
♦ தானம் செய்ய முன்வருபவர் நல்ல உடல்நலத்துடன் இருக்க வேண்டும்.
♦ 21 முதல் 55 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
♦ அவரின் மருத்துவ வரலாறு ஆராயப் படும். அடிப்படை உடல் சோதனைக்குப் பிறகு இரத்தம், ‘இசிஜி’, மார்பு ஊடுகதிர், ‘சிடி’, ‘எம்ஆர்ஐ’ ஆகிய சோதனைகளுக்கு அவர் உட்பட வேண்டும்.
♦ அவருக்கு உளவியல்-சமூக மதிப்பீடு மேற்கொள்ளப்படும்.
♦ தானம் தரப் பொருத்தமானவர் என அறியப்பட்டால், சிகிச்சையைத் தொடர அறநெறிக் குழுவிடம் அனுமதி கோரப்படும்.
♦ உறுப்புக் கொடைக்குப் பின், அவர் தீவிர கண்காணிப்புப் பிரிவில் வைக்கப் படுவார். மருத்துவமனையில் மூன்று முதல் ஆறு நாள்களுக்கு அவர் இருப்பார். நான்கில் இருந்து ஆறு வாரங்களில் அவர் தமது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம்.
தானம் செய்பவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படுமா? கல்லீரல் செயல்பாடு முன்னிருந்த நிலைக்குத் திரும்புமா?
எல்லா உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளிலும் சிறிய அளவிலான இழப்பு அபாயம் உள்ளது. இதில் 0.3% இழப்பு அபாயம் இருக்கிறது. தானம் செய்தவரின் கல்லீரல் இரண்டிலிருந்து மூன்று வாரங்களில் மீளுருவாக்கம் காணும். ஒரு மாதத்திற்குள் கல்லீரல் வழக்கமான செயல்பாட்டிற்குத் திரும்பும்.
விளக்கம்: தேசிய பல்கலைக்கழக மருத்துவ மனையின் மூத்த மருத்துவ ஆலோசகர் டாக்டர் எஸ்.வெங்கடேஷ் கார்த்திக், மூத்த மருத்துவ ஆலோசகரும் இணைப் பேராசிரியருமான டாக்டர் ஸ்ரீதர் ஐயர்.