எம்.கே. ருஷ்யேந்திரன்
தமிழர்களின் பாரம்பரியத்தில் எக்காளத்திற்கு எப்போதுமே தனி இடமுண்டு, அதைப்போல ராஜகம்பீர ஒலியை வேறு எந்தக் கருவியும் ஏற்படுத்தாது என்கிறார் எக்காளக் கலைஞர் திரு கலியபெருமாள், 82.
தமிழ்நாட்டின் பூம்புகார் அருகேயுள்ள பெரும்பள்ளம் எனும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், தமது முக்காலமும் எக்காலமும் எக்காளத்தோடுதான் நகர்கிறது என்கிறார்.
“என் தாத்தா திரு பழனி, என் தந்தை திரு மாரிமுத்து, பிறகு நான் என்று பரம்பரை பரம்பரையாக எக்காளம் வாசித்து வருகிறோம்.
“என்னிடம் இப்போதுள்ள எக்காளத்திற்கு வயது 100 ஆண்டுகளுக்குமேல் இருக்கும். தாத்தா, பிறகு தந்தை இப்போது நான் என மூன்று தலைமுறைகளாக எங்கள் எக்காளம் கம்பீர ஒலியை எழுப்பிக்கொண்டே இருக்கிறது,” என்றார் திரு கலியபெருமாள்.
தன்னிடம் இருக்கும் எக்காளத்திற்கு வயது 100 ஆண்டுகளுக்குமேல் இருக்கும் என்று இவர் குறிப்பிட்டார்.
உயிர் அடங்கும்வரை தன் எக்காளம் முழங்கும் எனக் கூறும் இவர், தான் மறைந்தாலும் தனது எக்காள ஒலி எங்கேயாவது எதிரொலித்துக் கொண்டே இருக்கும் என்று கூறி, எக்காளத்தை ஊதிக் காட்டியபோது, அதன் கம்பீர ஒலி என் ஐம்பொறிகளையும் அதிரச் செய்தன.