இல்லத்தரசியாக இருந்து தம் குடும்பத்தைக் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாகப் பரா மரித்து வந்த பத்மினி புருஷோத்தமன், 42, சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் (எஸ்யுஎஸ்எஸ்) இளங்கலைத் தமிழ்மொழி, இலக்கியப் பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு ஊழியரணி யில் மீண்டும் சேர்ந்திருக்கிறார்.
பட்டக்கல்வியில் 2019ஆம் ஆண்டுக்கான வெள்ளி விருதை வென்று உள்ள இந்த வருங்கால ஆசிரியர், எதைச் செய்தாலும் சிறப்பாகச் செய்யவேண்டும் என்பதில் உறுதி கொண்டிருப்பதாகக் கூறினார்.
சேலம் மாவட்டத்தில் பிறந்த அவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1998ல் கணினித்துறையில் இளநிலை அறிவியல் பட்டம் பெற்று அதன்பின்னர் 2001ல் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப்பட்டம் பெற்றார். இருந்தபோதும் பட்டம் பெற்ற ஆறு மாதங்களில் திருமணமாகி இல்லத்தரசியாக ஆனதால் இத்துறையில் வேலை அனுபவம் பெற முடியாமல் போனதாகத் திருமதி பத்மினி தெரிவித்தார்.
மகன் உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது நேரம் கிடைத்ததால் மீண்டும் வேலைக்கு போவது பற்றிய எண்ணம் வந்ததாகத் தெரிவித்த திருமதி பத்மினி, தமிழ்முரசு இதழில் எஸ்யுஎஸ்எஸ் பல்கலையின் தமிழ்ப்பட்டம் பற்றி வெளிவந்த விளம்பரம் மூலமாகவும் அங்கு படித்த தமிழ் ஆசிரியர்கள் சிலர் வாயிலாகவும் கேள்விப்பட்டார்.
அதுவரையில் தமது ஓய்வு நேரங்களில் மகனுக்குத் தமிழ் கற்றுத்தந்த திருமதி பத்மினிக்கு தமிழாசிரியர் ஆகும் எண்ணம் அப்போது தோன்றியதாகக் கூறினார்.
கணினித் துறையில் படித்துக்கொண்டிருந்தபோதே அடிப்படை அளவிலான சில தமிழ்ப்பாடங்களைக் கற்றிருந்த அவர், தமக்கு ஆர்வம் இருந்ததால் எஸ்யுஎஸ்எஸ்சின் தமிழ்ப் பட்டப்படிப்பில் சேர முடிவு செய்ததாகத் தெரிவித்தார்.
“நான் மீண்டும் கணினித் துறையை எடுத்துப் படிப்பதா அல்லது தமிழ்த்துறையில் சேர்வதா என்பது பற்றி சற்று யோசித்தேன். கணினித்துறையைப் பொறுத்தவரை நான் அப்போது படித்தது வேறு, இப்போது இருப்பது வேறு. ஆயினும், என் ஆர்வம் தமிழில் இருந்ததால் அதனைத் தேர்ந்தெடுப்பது சிறப்பாக இருக்கும் என எண்ணினேன்,” என்று அவர் கூறினார்.
2016ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் படிப்பைத் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்குள் முடித்த திருமதி பத்மினி தற்போது தேசிய கல்விக் கழகத்தில் பயிற்சி பெறுகிறார்.
தனது குடும்பத்தினரைக் கண்ணும் கருத்துமாகப் பராமரிப்பதில் மட்டுமே பல ஆண்டுகளைக் கழித்த அவருக்குப் படிப்பின் காரணமாக குடும்பத்திற்காக செலவு செய்யும் நேரம் குறைந்துபோனது சற்று சவாலாக இருந்ததாகக் கூறினார்.
“ஆயினும் என் கணவர் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். வீட்டுப் பொறுப்புகளைக் கூடுதலாக எடுத்துக்கொண்டு என் மகனைப் பார்த்துக்கொள்ளவும் அவர் உதவினார்,” என்றார்.
வீட்டில் படித்துக்கொண்டிருந்தால் வேலைகள் எல்லாப் பக்கத்திலிருந்தும் வரும் என்றபோதும் தமது கணவரும் மகனும் புரிந்துணர்வுடன் நடந்துகொண்டதாகத் திருமதி பத்மினி கூறினார்.
பல்கலைக்கழக வகுப்புகளுக்குப் போகமுடியாத சூழலில் பல்கலையின் இணையக் கற்றல் வழியாக வகுப்பின் காணொளிகளைப் பார்த்து பாடங் களைக் கற்றுக்கொண்டதாகக் கூறினார்.
வகுப்பறைச் சூழலில் ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் உரையாடுவதன் மூலம் கற்றல் மேலும் சிறப்பாக இருப்பதால் கூடுமானவரை வகுப்புகளுக்குச் செல்ல விரும்புவதாகத் திருமதி பத்மினி தெரிவித்தார்.
எஸ்யுஎஸ்எஸ் பல்கலையின் வகுப்பில் சக மாணவர்கள் முன்னிலையிலும் ஆசிரியர் முன்னிலையிலும் வாய்மொழிப் படைப்புகளைச் செய்தது தமது இளம்பருவ கல்லூரி வாழ்க்கையில் இல்லாத புதிய அம்சமாக இருந்த தாகக் கூறிய அவர், இதனால் தமது தொடர்புத்திறன் வளர்ந்ததாகவும் குறிப்பிட்டார்.
“இளம் மாணவர்கள், நடுத்தர வயதினர், சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர்கள், தமிழகத்தைச் சேர்ந்தோர் என பலதரப்பட்ட மாணவர்களுடனும் உறவாடுவதன் மூலம் வகுப்புச் சூழல் சுவாரசியமாகவும் ஆர்வமூட்டுவதாகவும் இருந்தது. பலரின் நட்பையும் நான் இங்கு பெற்றுள்ளேன்,” என்றார் அவர்.
ஆசிரியர் மதிப்பீட்டுக் கட்டுரை, தேர்வு ஆகியவற்றுக்காகவும் தம்மைத் தயார் செய்ய வேண்டியிருந்ததாகக் கூறிய அவர், கற்பிக்கப்படும் பாடங்களைத் தொடர்ச்சியாகப் படித்துவந்தால் அவற்றை எளிதாகச் சமாளிக்கலாம் என்றார்.
தமிழையே முழு பட்டப்படிப்பாகப் பயிலத் தொடங்கியபோதுதான் தமிழுக்குள் இருக்கும் ஆழத்தைத் தெரிந்து அதனைச் சுவைத்ததாக அவர் தெரிவித்தார். கலைப்பாடங்கள் எளிமையானவை என்று தமக்குத் தெரிந்தவர்கள் கூறியதைச் சுட்டிய அவர், தாம் முன்பு பயின்ற கணினி அறிவியலுக்குத் தமிழ்ப் பட்டப்படிப்பு எந்தவிதத்திலும் சளைத்தது அல்ல எனக் கூறினார்.
“தமிழ்மொழி பேசுவதற்கு எளிமை என்றாலும் அதன் இலக்கண விதிகளைப் பற்றி ஆழமாகப் படிப்பது கடினம். எஸ்யுஎஸ்எஸ்சின் தமிழ் ஆசிரியர்கள் திறமையாகவும் தெளிவாகவும் இவற்றை விளக்கியபோது எனக்கு சுலபமானது,” என்றார்.
மாணவர்களுக்குக் கற்பிக்க இயல்பான தமிழ்த்திறனே போதும் என சிலர் நினைப்பது தவறு என திருமதி பத்மினி தெரிவித்தார்.
“இன்றைய சூழலில் தமிழ் அதிகம் பேசாத மாணவர்கள் பெரும்பாலானோர் வகுப்பறையில் உள்ளனர். ஒவ்வொரு நிலையிலும் இருக்கும் மாணவர்களையும் தமிழ்மொழியை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்த ஆசிரியர்களின் பங்கு முக்கியம். தமிழை ஆழமாகத் தெரிந்து வைத்திருந்தால்தான் வகுப்புகளைத் தொடர்ந்து சுவாரசியமாக வைத்திருந்து மாணவர்களுக்கு கற்பிக்க முடியும். தமிழ் இலக்கியம், இலக்கணத்தின் அரிய அம்சங்களும் இவர்களைப்போய் சேரும், அதனால் முழுமையான ஆசிரியர் ஆவதற்கு தமிழ்ப் பட்டக்கல்வி நிச்சயம் தேவை என நினைக்கிறேன்,” என்றார் அவர்.
எஸ்யுஎஸ்எஸ் தமிழ் இளங்கலைப் பட்டக்கல்வியில் மொழிபெயர்ப்பு வகுப்பு மற்றோர் சிறப்பம்சம் என்று குறிப்பிட்ட திருமதி பத்மினி, “இருமொழித் திறன் சிங்கப்பூரில் மிகவும் முக்கியம். இந்த இருமொழித் திறனைத் தொடர்ந்து சம அளவில் வளர்த்துக்கொள்ள வேண்டும்,” என்றார்.
எஸ்யுஎஸ்எஸ்சின் தமிழ்ப் பட்டப்படிப்பைக் கடந்த ஆண்டு முடித்த திருமதி பத்மினி, தமக்கு விருது கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.
நேர நிர்வாகம், ஆசிரியர்களின் ஒத்துழைப்பு, குடும்பத்தினரின் ஒத்துழைப்பு ஆகியவையே இந்த வெற்றிக்கு முக்கியமான காரணங்கள் என அவர் குறிப்பிட்டார்.
“வகுப்பில் மூன்று மணி நேரம் இருக்கும்போது ஆசிரியர்கள் கூறு வதைக் கவனமாக உள்வாங்கினால் பாடங்களைப் படிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை,” என்றார்.
மறுபடியும் கல்லூரி வாழ்க்கையைச் சிங்கப்பூரில் தொடங்கிய முயற்சி வெற்றியடைந்ததில் மகிழ்ச்சி அடையும் திருமதி பத்மினி, தமிழ்ச்சார்ந்த துறையில் வேலை செய்ய ஆர்வம் உள்ளோருக்கு எஸ்யுஎஸ்எஸ்சின் இந்தப் படிப்பு நிச்சயம் உதவும் என்பதால் இந்த இளங்கலைப் படிப்பில் அவர் கள் தைரியமாகச் சேரலாம் எனக் கூறினார்.