கொரோனா கிருமித்தொற்று பரவல் நிலவும் இந்நேரத்தில் அனைவரும் அரசாங்க விதிமுறைகளை மதித்து பாதுகாப்புடன் முடிந்தவரை வீட்டில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளும் காணொளிகளை சிங்கப்பூரின் உள்ளூர் கலைஞர்கள் சிலர் வெளியிடுகின்றனர். இதுவரை வெளிவந்துள்ள இரண்டு பகுதிகளில் 21 உள்ளூர் கலைஞர்கள், தங்களது தனிப்பட்ட பாணிகளில் மக்களுக்கு ஆலோசனையும் ஊக்கமும் வழங்கியுள்ளனர். இதன் மூன்றாவது பகுதி விரைவில் வெளியீடு காண உள்ளது.
"எங்களை கலைஞர்களாக அங்கீகரிக்கும் சமுதாயத்திற்கு இது நாங்கள் செய்யும் சிறு தொண்டு," என இந்தக் காணொளித் தொடரின் தயாரிப்புக்கு ஏற்பாடு செய்திருந்த ரொயல் புரொடக்ஷன்ஸின் இயக்குநரும் சிங்கப்பூர் இந்திய கலைஞர் சங்க ஆலோசகருமான திரு கெவின் ராஜா தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

