சிங்கப்பூரில் ஜூலை 10 ஆம் தேதி நடந்து முடிந்த 2020 பொதுத்தேர்தல் முதன் முதலாக பல புதுமைகளைக் கண்டது.
ஆக அதிக அரசியல் கட்சிகள்- அதாவது 11 கட்சிகள் களம் கண்டன. வரலாற்றில் முதல் தடவையாக ஓர் எதிர்க்கட்சி இரண்டு குழுத் தொகுதிகளைக் கைப்பற்றி நாடாளுமன்றத்தில் 10 இடங்களைத் தன்வசப்படுத்திக் கொண்டது.
இதைவிட குறிப்பிடும்படியாகச் சொல்ல வேண்டுமானால், வழக்கமான தேர்தல் பொதுக்கூட்டங்கள் இல்லாத முதல் தேர்தல் இதுதான்.
இவை எல்லாவற்றையும்விட, அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் தலைவர்களும் பிரசார பிரமுகர்களும் வாக்காளர்களும் முற்றிலும் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் சார்ந்திருந்து சாதித்து முடித்த முதலாவது தேர்தல் இதுதான்.
இந்தத் தேர்தல் பல பாடங்களைப் போதிக்கிறது. இணைய ஈடுபாடு, நம்பகத்தன்மை எல்லாம் இதில் உயிர்நாடியானவை. ஆனாலும் அவை எல்லாம் எப்போதுமே வாக்குகளாக மாறும் என்று சொல்லிவிட முடியாது...
பொதுத் தேர்தல் என்றால் பொதுக் கூட்டம் இருக்கும். கட்சித் தொண்டர்களும் ஆதரவாளர்களும் பொதுமக்களும் அத்தகைய கூட்டங்களுக்குத் திரண்டு வருவார்கள். வேட்பாளர்கள், கட்சித் தலைவர்கள் எல்லாரும் காரசாரமாகப் பேசி தங்களுக்கு ஆதரவு திரட்டுவார்கள்.
சிங்கப்பூரில் அண்மைய காலம் வரை இப்படித்தான் பொதுத் தேர்தல் நடந்து வந்தது. ஆனால் இம்மாதம் 10ஆம் தேதி நடந்த 14வது நாடாளுமன்றத் தேர்தல் பொதுக்கூட்டங்கள் இல்லாமல் இணையம், சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்திய புரட்சித் தேர்தலாக நடந்தேறியது.
சிங்கப்பூரில் முற்றிலும் இணையத்தைச் சார்ந்து நடந்த முதல் பொதுத் தேர்தல் இதுதான் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். தேர்தலில் போட்டியிட்ட 11 அரசியல் கட்சிகளும் அவற்றின் வேட்பாளர்களும் இணையம் வழி பிரசாரம் செய்தனர்.
சில அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில் பொதுக் கூட்டம் போன்றவை எல்லாம் தேவையில்லை என்று கூட நினைக்கத் தோன்றியது. இன்ஸ்டகிராமில் ஒவ்வொரு பதிவின் மூலம் 12,000 பேரை எட்டிய சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைமைச் செயலாளர் டான் செங் போக் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
இணையப் பிரசாரம் எதிர்த்தரப்புகளுக்கு நன்மை பயத்ததாக கண்காணிப்பாளர்கள் சிலர் வாதாடுகிறார்கள்.
வாக்காளர்கள் பலரையும் பொறுத்தவரையில் தங்களுடைய கட்சிகளை, வேட்பாளர்களை, கொள்கைகளைத் தெரிந்துகொள்ள இணையம்தான் வழியாக இருந்தது என்கிறார் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளி இணைப் பேராசிரியர் இயூஜின் டான்.
எல்லா கட்சிகளும்...
பொதுக் கூட்டத்திற்குப் பதிலாக மக்கள் செயல் கட்சி, பட்டாளிக் கட்சி போன்ற கட்சிகள் வாக்காளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை அரங்கேற்றின. இத்தகைய நிகழ்ச்சிகள் தேர்தல் பொதுக் கூட்டங்களைவிட அறிவுபூர்வமான முறையில் இருந்தன என்கிறார் பேராசிரியர் டான்.
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி, மக்கள் குரல் கட்சி ஆகியவை தங்கள் ஃபேஸ்புக் பக்கங்களில் வேட்பாளர்களின் உரைகளைப் பதிவேற்றின. 11 கட்சிகளும் இணையம் வழி பேரணிகளை நடத்தின.
தொகுதி நிலையிலான அரசியல் ஒளிபரப்புகளில் அவை பங்கெடுத்துக்கொண்டன. இவை எல்லாம் அரசியல் கட்சிகளின் எண்ணங்கள் பற்றி வாக்காளர் களுக்குத் தெளிவான ஒரு சிந்தனையைக் கொடுத்ததாக முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் லிம் சன் சன் கூறுகிறார்.
கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இப்போது அதிக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களின் குரல்களைக் கேட்பதற்கு இணையம் வழிவகுத்ததாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக தொடர்பு மற்றும் புதிய ஊடகத் துறையைச் சேர்ந்த மூத்த விரிவுரையாளர் டாக்டர் நட்டாலி பாங் தெரிவிக்கிறார்.
இருந்தாலும் அளவுக்கு அதிக தகவல்கள் குவிந்ததால் இணையத்தில் எல்லா அரசியல் கட்சிகளின் விவாதிப்புகளையும் செவிமடுக்க முடியாமல் இணையப் புழங்கிகள் தடுமாறிவிட்டதாக தேசிய பல்கலைக்கழகத்தின் சமூகவியல் அறிஞர் டான் எர்ன் செர் தெரிவித்தார்.
பல முதியவர்கள் இணையத் தொழில்நுட்பத்தை அறியாதவர்கள் என்பதால் மூத்த வாக்காளர்கள் போன்ற சமூகத்தின் சில பிரிவினரை ஈடுபடுத்த அரசியல் கட்சிகள் தவறிவிட்டதாக சிம் குளோபல் எஜுகேஷன் என்ற கல்வி நிறுவனத்தில் துணை விரிவுரையாளராக இருக்கும் டாக்டர் ஃபிளிக்ஸ் டான் கூறுகிறார்.
என்னதான் இணையம் வழி பிரசாரம் செய்தாலும் அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டம் போல் வாக்காளர்களுடன் உணர்வுபூர்வமாகத் தொடர்புகொள்ள முடியாது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இது இணையம் வழி தேர்தலை நடத்துவதில் உள்ள குறைபாடு என்று அவர்கள் கருதுகிறார்கள்.
பொதுக் கூட்டங்களில் அரசியல் கட்சிகள் நன்கொடை திரட்டுவதும் உண்டு. இந்த வாய்ப்பு இணையத் தேர்தல்களில் இல்லாமல் போய்விடுகிறது என்கிறார் பேராசிரியர் இயூஜின் டான்.
இணையப் பிரசாரத்தைவிட தேர்தல் பொதுக் கூட்டங்கள் காரசாரமானவை என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வீ கிம் வீ தொடர்பு தகவல் பள்ளி பேராசிரியர் ஆங் பெங் ஹுவா தெரிவித்தார்.
எதிர்த்தரப்பு வேட்பாளர்கள் நடத்தும் பொதுக் கூட்டங்களில் அதிக அளவில் மக்கள் திரள்வர். அவர்களிடம் உணர்ச்சிவசமாகப் பேசி வாக்குகளைத் தங்கள் பக்கம் ஈர்க்கும் ஓர் அனுகூலம் எதிர்த்தரப்புக்கு இருந்தது என்று இவர் கூறுகிறார்.
இதை ஏற்றுக்கொண்ட பேராசிரியர் இயூஜின் டான், பொதுக் கூட்டங்கள் நடந்திருந்தால் கடுமையான போட்டி இருந்த சில தொகுதிகளில் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கலாம் என்றார்.
காணொளிகள் இணையப் பிரசாரத்தில் தலைசிறந்தவை என்று கூறும் வல்லுநர்கள், இதைப் பொறுத்தவரையில் இந்தத் தேர்தலில் பாட்டாளிக் கட்சி சிறந்த முறையில் செயல்பட்டதாகக் கருதுகிறார்கள்.
சங்கிலித் தொடர்...
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் டாக்டர் டான், பாட்டாளிக் கட்சியின் திருவாட்டி நிக்கோல் சியா, ஜாமுஸ் லிம், மக்கள் செயல் கட்சியின் அரசியல் தலைவர்கள் எல்லாரும் தங்கள் இணையப் பிரசாரத்தில் ஆர்வத்தைத் தூண்டிவிட்டனர்.
திருவாட்டி சியாவும் டாக்டர் டானும் தங்கள் இன்ஸ்டகிராம் பக்கங்கள் மூலம் ஆதரவாளர்களை ஈடுபடுத்தி அவர்களிடம் இருந்து கருத்துகளை வாங்கினார்கள்.
இதனால் மேலும் ஆதரவாளர்கள் தங்கள் கருத்துகளையும் தெரிவிக்க விருப்பப்பட்டனர்.
இதன்மூலம் ஒரு தொடர் சங்கிலியை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள் என்று பேராசிரியர் லிம் சன் சன் குறிப்பிடுகிறார். இந்தக் காட்சிகள் எல்லாம் ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டன.
மசெகவின் தலைமைச் செயலாளரான பிரதமர் லீ சியன் லூங் இணையத்தில் பேரணி பிரசாரம் செய்தார். பல மசெக அணிகளும் இணையம் வழி பிரசாரத்தில் இறங்கி தங்கள் தொகுதிக்கான எதிர்கால திட்டங்களை விவரமாக விளக்கின.
புதிய வேட்பாளர்கள் கன்னி உரை நிகழ்த்தும் கணொளிகளும் இணையத்தில் பதிவேற்றப்பட்டன. அவை நல்ல முறையில் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
பாட்டாளிக் கட்சியைப் பொறுத்தவரையில் ஏறக்குறைய ஒவ்வொரு நாள் இரவும் கலந்துரையாடல் நிகழ்ச்சியைப் பதிவேற்றியது. அதன் முன்னாள் தலைமைச் செயலாளர் லோ தியா கியாங், காணொளியில் தியோசியு மொழியில் உரையாற்றினார்.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி, வேலை நியமனக் கொள்கை போன்ற முக்கியமான பிரச்சினைகள் பற்றிய காணொளிகளையும் தயாரித்து இருந்தது.
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி இணையப் பேரணிகளை நடத்தியது. இதன் தலைமைச் செயலாளர் சீ சூன் ஜூவான் தன் தொகுதி உலாக்களை ஃபேஸ்புக்கில் நேரடியாகப் பதிவேற்றினார்.
மக்கள் குரல் கட்சி, தேசிய ஒருமைப்பாட்டு கட்சி, ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளி கட்சி, மக்கள் சக்தி கட்சி, சீர்திருத்தக் கட்சி போன்ற கட்சிகள் இணையம் வழி நேரடி பேரணிகளை நடத்தின.
மசெகவைப் பொறுத்தவரை, பிரதமர் லீ சியன் லூங் ஃபேஸ்புக் பக்கத்துடன் 1.6 மில்லியனுக்கும் அதிக பயனீட்டாளர்கள் தொடர்புகொண்டிருந்தனர். இது ஆளும் கட்சியின் பரந்து விரிந்த சமூக ஊடக எல்லையைப் பிரம்மாண்டமாக எடுத்துக்காட்டியது என்றார் பேராசிரியர் ஆங்.
பிரதமரின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஏராளமான முயற்சிகள் இடம்பெற்றன. அவை வியக்கத்தக்க அளவில் சிறப்பாக இருந்தன என்று இவர் தெரிவித்தார். இதர சிங்கப்பூர் அரசியல்வாதிகளுடன் ஒப்பிடுகையில் பிரதமர் லீக்குத் தான் ஆதரவாளர்கள் அதிகமாக இருந்தார்கள்.
பதிவுகளும் பலனும்
இருந்தாலும் மசெகவின் சமூக ஊடக முயற்சி இணையத்தில் எடுப்பாக தெரியும் அளவுக்கு உதவவில்லை என்கிறார்கள் வல்லுநர்கள். ஜூலை 1 முதல் 10 வரை அரசியல்வாதிகளின் இணையப் பக்கங்களைக் கண்காணித்து வந்த 'மெல்ட்வாட்டர்' என்ற ஊடகக் கண்காணிப்புத் தளத்தின் புள்ளிவிவரங்கள் பல நிலவரங்களைக் காட்டுகின்றன.
பெரும்பாலான ஃபேஸ்புக் பதிவுகளை மசெக செய்து இருக்கிறது. இருந்தாலும் அந்தப் பதிவுகள் தொடர்பில் ஈடுபாடு காட்டியவர்களின் எண்ணிக்கை அந்த அளவுக்கு இல்லை. மசெக ஜூலை 1 முதல் 10 வரைப்பட்ட கால கட்டத்தில் 121 ஃபேஸ்புக், பதிவேற்றங்களைச் செய்தது. அதன் தொடர்பில் இடம்பெற்ற பதில் செயல்பாடுகள் 131,000 ஆக இருந்தன.
இந்த எண்ணிக்கை, பாட்டாளிக் கட்சியைப் பொறுத்தவரையில் ஏறக்குறைய 300,000 ஆக இருந்தது. பாட்டாளிக் கட்சி 78 பதிவேற்றங்களைச் செய்து இருந்தது. சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி 54 பதிவேற்றங்களைக் கொண்டு சுமார் 122,000 கலந்துறவாடல்களைச் சாதித்தது.
இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் மசெகவை பாட்டாளிக் கட்சி முந்தி இருக்கலாம். ஆனால் இவை அப்படியே வாக்குகளில் பிரதிபலித்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கவனிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு வேட்பாளர் அல்லது ஒரு கட்சி சமூக ஊடகத்தில் வலுவான கொள்கை அல்லது வாதத்திறன் அடிப்படையில் செல்வாக்கு செலுத்தினால் அதனால் சாதக விளைவுகளை எதிர்பார்க்க முடியும் என்று முர்டாக் பல்கலைக் கழகத்தில் சிங்கப்பூர் ஊடகம் மற்றும் அரசியல் பற்றி ஆய்வு நடத்தும் இணை பேராசிரியர் டெரன்ஸ் லீ தெரிவிக்கிறார்.
இதை ஏற்றுக்கொண்ட டாக்டர் பாங், சமூகப் பிரசாரம் வாக்காக மாறுமா மாறாதா என்பது, ஒரு தகவலை சொல்லி பலரையும் வசப்படுத்தும் திறன், அந்தத் தகவல் எந்த அளவுக்குத் திறமையாக முன்வைக்கப்படுகிறது என்ற நிலை ஆகிய இரண்டையும் பொறுத்து இருக்கும் என்றார்.
இந்த இரண்டையும் அரங்கேற்றி பாட்டாளிக் கட்சி சமூக ஊடகத்தில் ஆதிக்கம் செலுத்தியது என்றார் டாக்டர் பாங்.
ஃபேஸ்புக்கைவிட...
ஃபேஸ்புக் போன்ற பகிரங்க தளங்களைவிட பிரத்தியேகமிக்க வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற தளங்கள் வாக்குகளைப் பொறுத்தவரை அதிக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று பேராசிரியர் ஆங் குறிப்பிடுகிறார்.
தேர்தல் பொதுக்கூட்டங்கள் இல்லாததால் மீடியாகார்ப் நேரடி தொலைக்காட்சி விவாதங்களில் அதிக கவனம் திரும்பியது. முன்பெல்லாம் மக்கள் இதைப் பற்றி அவ்வளவாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள் என்று தேசிய பல்கலைக் கழகத்தின் சட்டப் பேராசிரியர் கெவின் டான் கூறினார்.
தங்கள் நண்பர்களும் குடும்பத்தினரும் பகிர்ந்துகொண்ட தகவல்கள், பதிவேற்றங்கள், காணொளிகள் ஆகியவற்றை வாக்காளர்கள் பலரும் பகிர்ந்துகொண்டதாக பேராசிரியர் லீ சுட்டினார்.
இத்தேர்தலின்போது, மின்னிலக்கத் தளங்களில் மற்றவர்களை ஈடுபடுத்திய குடிமக்கள், குடிமை அமைப்புகள், கருத்தாய்வாளர்கள், தர்க்கவாதிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது என்பதை டாக்டர் பாங் சுட்டினார். கலந்துரையாடல்கள், விவாதிப்புகளில் மக்கள் ஈடுபட பல வாய்ப்புகளை இவை உருவாக்கித் தந்தன என்றார் அவர்.
ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் போன்றவற்றில் இதர சிங்கப்பூரர்களும் பிரபலங்களும் தங்கள் அரசியல் கண்ணோட்டங்களை முன்வைத்தனர். இவை வாக்காளர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக் கூடும் என்கிறார் டாக்டர் பாங்.
பொதுத் தேர்தல் முடிந்துவிட்டாலும் இணைய பாணி பிரசாரம் இங்கு தொடர்ந்து இருந்து வரும் என்பதே வல்லுர்களின் கருத்தாக உள்ளது. அரசியல் கட்சிகள் இணையத்தையும் சமூக ஊடகத்தையும் தங்களுக்குச் சாதகமாக எப்படி எப்படி எல்லாம் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது இந்தத் தேர்தலின்போது தெரிந்தது. இதைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் ஒரு புரட்சித் தேர்தல் என்று பேராசிரியர் இயூஜின் டான் வர்ணித்தார்.
இப்போதைய கொவிட்-19 கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் அடுத்த தேர்தல் நடக்கும் பட்சத்தில், பழைய பாணியும் புதிய இணைய பாணியும் கலந்துதான் இருக்கும் என்று கூறும் இவர், இதுதான் இப்போது கேள்வி என்றார். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்குப்பெட்டியுடன் தாங்கள் பங்கெடுத்துக்கொள்ளும் ஒரு விவகாரம்தான் அரசியல் என்ற எண்ணம், பல குடிமக்களைப் பொறுத்தவரை இனிமேல் இருக்காது என்கிறார் டாக்டர் பாங்.
இணையப் பேரணிகள், பொது ஒளிபரப்புகள் எல்லாம் உண்மையிலேயே மதிப்பு மிக்கவையாக இருந்தன. பார்வையாளர்கள் பலவாறாக சிதைந்து இருக்கக்கூடிய ஒரு யுகத்தில் இவை தேசிய நிகழ்ச்சிநிரல் ஒன்றை உருவாக்க உதவின.
அந்த நிகழ்ச்சிநிரல் இணைய விவாதிப்புகளுக்கு உறுதுணையாக இருந்து அதில் ஒருமித்த கவனத்தைத் திருப்ப ஓரளவுக்கு உதவின என்று பேராசிரியர் லிம் குறிப்பிட்டார்.

