பாசம் துடிக்கிறது கடமை தடுக்கிறது

பாசம் துடிக்கிறது கடமை தடுக்கிறது

2 mins read

கொவிட்-19 கிருமித்தொற்று தலைதூக்கி மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்புக்கு வந்ததற்கு முன் நாள்தோறும் சுமார் 300,000க்கும் மேற்பட்டவர்கள் ஜோகூர் கடற்பாலம் மூலம் இருநாட்டிற்கும் இடையில் பயணம் மேற்கொண்டுவந்தனர். அவர்களில் கிட்டத்தட்ட 100,000 பேர் வேலை நிமித்தம் எல்லை கடந்து சென்று வந்தனர்.

ஆனால் கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதி முதல் மலேசியா எல்லைகளை மூடியதால் பலர் குடும்பங்களைப் பிரிந்து சிங்கப்பூரிலேயே இருந்து வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இப்போது நாடு திரும்பும் மலேசியர்கள், ஹோட்டல்களிலோ இதர மையங்களிலோ 14 நாட்களுக்குச் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்குச் செலவு அதிகமாகும். வேலை போனால் வருவாய் போகும் என்பதால் பல மலேசியர்கள் ஏறத்தாழ 4 மாத காலமாக இங்கேயே தங்கி இருந்து வேலை பார்க்கிறார்கள்.

ஆனாலும் வீடு செல்ல ஆவலுடன் இருக்கிறார்கள்.

பிப்ரவரி மாதம் திருமணம் முடித்து சிங்கப்பூருக்கு வந்த 32 வயது திரு கிரு‌ஷ்ணமூர்த்தி, இன்னமும் மனைவியைப் பார்க்கவில்லை.

சிங்கப்பூரில் 14 ஆண்டுகளாக பணியாற்றி வேலையிழந்த திரு பால தினேஷ், 46, பணம் இல்லாமல் எப்படி தங்குமிடச் செலவுகளை ஏற்பது என்று கவலைப்படுகிறார்.

தேக்கா நிலையத்தில் ஆடைகள் விற்பனைக் கடையில் ஏழாண்டு களாகப் பணியாற்றி வந்த திவ்யா ராஜு, மார்ச் மாதத்தில் மலேசியா சென்றார்.

பிறகு அவரால் இங்கு வரமுடியவில்லை. ஆகையால் போதிய வருவாயை ஈட்ட முடியாமல் ஜோகூரின் தம்போய் நகரில் விநியோக வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்.

அதிகம் சம்பாதிக்க வேண்டுமானால் சிங்கப்பூரிலேயே வேலை பார்க்க வேண்டும். சிங்கப்பூரில் வேலை பார்க்க வேண்டுமானல் இங்கேயே தங்கவேண்டும். உறவினர்களைப் பார்க்க முடியாது.

திவ்யா ராஜுவுக்கு வருமானம் முக்கியம். இதனால் சிங்கப்பூர் வருவதற்கு இவர் வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறார். இவர்களைப் போல் ஏராளமானோரை கொவிட்-19 பல வழிகளில் தவிக்கவிட்டு இருக்கிறது.