வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வரும் அனைவரும் வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவை நிறைவேற்ற வேண்டும்

2 mins read
6576f405-a66e-41a5-a78d-4863d356fba7
வெளிநாடுகளில் இருந்து ஜூன் 8ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தில் வந்திறங்கிய பயணிகள். படம்: ஏஎப்பி -

- திமத்தி கோ -

கடந்த ஜூன் 18ஆம் தேதி முதல் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் அனைவருக்கும் வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு வழங்கப்பட்டு வருகிறது. அப்படி கட்டாயம் வீட்டிலேயே இருக்கும் காலம் நிறைவு பெறுவதற்கு சில நாட்களுக்குமுன் அவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இப்போதைக்கு, புருணை, மக்காவ், சீனா, நியூசிலாந்து, தென்கொரியா, தைவான், வியட்னாம், ஆஸ்திரேலியா (விக்டோரியா மாநிலம் தவிர்த்து) ஆகிய நாடுகளில் கடைசி

14 நாட்களைச் செலவிட்டபின் இங்கு வருவோர், தாங்கள் தங்கியிருக்கும் இடத்திலேயே 'வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவை' நிறைவேற்ற அனுமதிக்கப்படுகிறது.

மற்ற நாடுகளில் இருந்து இங்கு வருபவர்கள், பிரத்தியேக வசிப்பிடங்களில் 'வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவை' நிறைவேற்ற வேண்டும்.

சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் தவிர்த்த மற்றவர்கள், அத்தகைய பிரத்தியேக வசிப்பிடங்களில் தங்குவதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

பயண அறிவுறுத்தல்களை மீறி, இவ்வாண்டு மார்ச் 27ஆம் தேதிக்குப் பிறகு வெளிநாடு சென்ற சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் பிரத்தியேக வசிப்பிடங்களில் தங்குவதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

மருத்துவ அல்லது நடமாட்டப் பிரச்சினைகள் காரணமாக பிரத்தியேக வசிப்பிடங்களில் தங்குவது சிரமம் எனக் கருதுவோர் தங்களைப் பற்றிய விவரங்களை go.gov.sg/shnhotelneeds எனும் இணையப்பக்கம் வழியாகத் தெரிவிக்க வேண்டும்.

கூடுதல் உதவி தேவைப்படின் 6812-5555 எனும் தொலைபேசி எண் வழியாக அவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

வீட்டிலேயே இருப்பதற்கான காலம் நிறைவடையுமுன், பெரும்பாலான பயணிகள் சமூகப் பரிசோதனை மையங்களுக்குச் சென்று தங்களை கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

பரிசோதனை நேரம், இடம் போன்ற தகவல்கள் குறுஞ்செய்தி அல்லது தொலைபேசி அழைப்பு அல்லது தங்கியிருக்கும் பிரத்தியேக வசிப்பிடங்கள் மூலமாக அவர்களுக்குத் தெரிவிக்கப்படும்.