கடைகளில், கடைத்தொகுதிகளில், குடியிருப்புப் பேட்டைகளில் பாதுகாவல் சேவையை வழங்குவோர், இப்போதெல்லாம் வெறும் பாதுகாவலர் மட்டுமின்றி, உடல் வெப்பம் பரிசோதிப்பது, கூட்ட நெரிசலை தவிர்ப்பது, திசை காட்டிகளாக இயங்குவது என முன்களப் பணியாளர்களாகவும் மாறிக் கொண்டு சேவையாற்றுகிறார்கள்.
கொவிட்-19 கிருமிப் பரவல் காலத்திலும் சம்பளம் கூடிக்கொண்டு வரும் துறையாகவும் பல்லாயிரக் கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகள் நிலைத்து இருக்கும் துறையாகவும் பாதுகாவல் துறை உள்ளது. இந்தத் துறையைச் சேர்ந்த ஊழியர்களில் 82% சிங்கப்பூரர்கள். நம் குடிமக்களுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கும் புகலிடம் என்றே இதைச் சொல்லலாம்.
புதிதாக இந்த வேலையில் சேர விரும்புவோர் மூன்று அடிப்படை பயிற்சிக்குச் செல்லவேண்டும்.
“ஒரே வாரத்தில் அதை முடித்து சான்றிதழ் பெற வாய்ப்புண்டு. அதை முடித்து இந்தப் பணியைத் தொடங்கலாம். கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து முற்போக்கான சம்பள அமைப்பைக் கொண்டது இந்தத் துறை. அதனால் தேர்ச்சிகள், உற்பத்தித்திறன் உயர்வுக்கு ஏற்ப சம்பளமும் உயரும்.
“முன்பு இருந்ததைவிட இப்போது தொடக்கச் சம்பளமும் அதிகம்,” என்று தெரிவிக்கிறார் சான்றிதழ் பெற்ற பாதுகாவலர் முகவர் சங்கத்தின் கௌரவச் செயலாளர் திரு கேரி ஹாரிஸ், 46.