கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு வரையில், தீபாவளி என்றால் பிரபல திரைப்பட நட்சத்திரங்களின் படங்கள் கொண்ட வாழ்த்து அட்டைகளை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்புவது தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு முக்கிய அங்கம்.
பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்து கைப்பட எழுதிய வாழ்த்து அட்டைகளுக்கான மதிப்பே தனி. வீட்டுக்கு அஞ்சலில் வரும் வாழ்த்துகளைத் தோரணமாக கட்டித் தொங்க விடும்போது தனி மகிழ்ச்சி ஏற்படும். இந்த மகிழ்ச்சியுணர்வை மீண்டும் ஏற்படுத்தும் நோக்கத்தில் பிறந்தநாள், விழாக்களுக்கான வாழ்த்து அட்டைகளை புதுமையான விதத்தில் வடிவமைக்கத் தொடங்கினார் 23 வயது ஏஞ்சல் மேரி ஓவியா.
சிங்கப்பூர் நிர்வாக பல்கலைக்கழகத்தில் பட்ட படிப்பை முடித்த இவர், ‘ஏஞ்சல்ஹார்ட்வொர்க்ஸ்’ என்ற சமூக ஊடகப் பக்கம் மூலமாக வாழ்த்து அட்டைகளை விற்பனை செய்கிறார். இவரே வரைந்து தயாரிக்கும் வாழ்த்து அட்டைகளுக்கு சமூக ஊடக பக்கங்களில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது.
“தமிழ் எழுத்துகளுக்குத் தனித்துவமான வடிவமும் அழகும் உண்டு. அவற்றைப் பயன்படுத்தும் வடிவமைப்பாளர்கள் சிங்கப்பூரில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றனர். தமிழ் வாக்கியங்கள், வரிகளைக் கொண்டு வடிவமைப்பது எனக்குப் பிடித்த ஒன்று,” என்றார் ஏஞ்சல். “கைபேசி, மின்னஞ்சல் வழியாக எல்லாருக்கும் ஒரே வாழ்த்துச் செய்தியை அனுப்புவதைவிட, ஒவ்வொருவருக்கும் கைப்பட வாழ்த்து எழுதி அனுப்பினால் முக்கியமாக தமிழில் எழுதி அனுப்பினால் அதைப் பெறுபவர் அதிக அளவு மகிழ்ச்சி கொள்வர். வாழ்த்து அட்டைகள் தமிழில் இருப்பதால் மாறுபட்ட பரிசாக இருக்கும்,” என்றார் ஏஞ்சல்.