நோய்ப் பரவல் சூழலில், உறவினர்வீடுகளுக்கு தீபாவளி விருந்துக்குச் செல்பவர்களுக்காக பண்டிகைக் கால முகக் கவசங்களை அறிமுகம் செய்துள்ளது ‘மினிஸ்டிரி ஆஃப் டெக்ஸ்டைல்ஸ்’ நிறுவனம்.
கொவிட்-19 கிருமித்தொற்று தலைதூக்கியபோது, வீட்டில் இருந்த படியே பொருட்களை வாங்குவோர் வசதிக்காக, மார்ச் மாதத்தில் சமூக ஊடகத்தில் இந்த ஆடை விற்பனை சேவையை தொடங்கினார் 25 வயது முஹம்மது ஃபர்வீஸ்.
“கிருமிப் பரவல் சூழல் சில வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தது,” என்ற அவர், காலத்திற்கேற்ப ‘டிசைனர்’ முகக் கவசங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். பல வண்ணங்களில் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப அமைந்த இந்த முகக் கவசங்கள் வரவேற்பு பெற்றது.
தற்போது தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகளுக்கு ஏற்ற, ‘எம்பிராய்டரி மாஸ்க்’, ‘சீக்குயின் மாஸ்க்’, ‘கோல்ட் மாஸ்க்’, ‘ரா சில்க் மாஸ்க்’, ‘கலம்காரி மாஸ்க்’ போன்ற முகக் கவசங்களை தயாரிக்கிறார்.
“இந்தத் தீபாவளியில் முகக் கவசங்களும் புத்தாடைகளின் ஓர் அங்கம்,” என்றார் அவர்.
மூன்று முகக் கவசங்கள் வாங்குபவர்களுக்கு இலவச விநியோகச் சேவையை வழங்கும் அவர், ஒரு வாரத்திற்கு 100 முகக் கவசங்கள் வரையில் விற்கிறார். திருமணங்களுக்கும் பலர் அவரிடம் முகக் கவசங்கள் வாங்கிவருகின்றனர்.
சிலர் திருமணத்திற்கு வருபவர்களுக்கு அன்பளிப்பாகவும் மற்றவர்கள் உறவினர், குடும்பத்தினர் ஒரே மாதிரி அணிந்திருக்கவும் இவரிடம் முகக் கவசங்களை வாங்குகின்றனர். துணிக்கடைகளுக்குச் சென்று டிசைன்களைப் பார்த்து உள்ளூர் நிறுவனத்தின் பங்காளித்துவத்துடன் முகக் கவசங்களைத் தயாரிக்கும் அவர், இந்தத் தொழிலில் இறங்கியதுமே காலத்தின் தேவைகளைத் தன்வசப்படுத்திக்கொண்டார்.
“சேலை, ரெடிமேட் ரவிக்கை என மற்ற பொருட்களையும் விற்றாலும், வாராவாரம் புதிய வடிவங்களில் முகக் கவசங்களை அறிமுகப்படுத்துவதே முக்கிய நோக்கம்,” என்றார் ஃபர்வீஸ்.