கிருமித்தொற்றில் இருந்து மீண்டவரின் அக்கறை, அறிவுரை
கொவிட்-19 தொற்றை வெற்றிகொள்ள தனிமையே முக்கிய ஆயுதம் என்பதால் பண்டிகைக் காலமாக இருந்தாலும் அன்பிற்குரியவர்களுக்காக தனிமையில் இருக்கத் தயங்கக்கூடாது என்கிறார் அதிலிருந்து மீண்டு வந்த ஆர்.எஸ். சுப்பிரமணியம், 50 (படம்).
கணினி கட்டமைப்பு தலைமைப் பொறியாளரான திரு மணி, ஆபத்திலிருந்து விடுபட்ட நிம்மதி இருந்தாலும் அது கொண்டாட்ட உணர்வாக இன்னும் உருவெடுக்கவில்லை என்கிறார்.
தீபாவளியன்று நண்பர்களுடன் கொண்டாட்டம் ஒன்றை நடத்தலாம் என முதலில் நினைத்திருந்த இவர், பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து அந்த எண்ணத்தைக் கைவிட்டார்.
"மெத்தனமாக இருந்தோம் எனில் கிருமித்தொற்று முன்புபோல உயர்வதற்கு அதிக காலம் ஆகாது," என்று இவர் கூறியபோது ஒருவித அக்கறை உணர்வு தொனித்தது.
சுவா சூ காங் வட்டாரத்தில் தனியாக வசிக்கும் ஒற்றையரான திரு மணி கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி குடலிறக்கப் பிரச்சினைக்காக ஃபேரர் பார்க் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் 41 டிகிரி செல்சியஸ் அளவிற்குக் காய்ச்சல் கண்டதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார்.
"மூச்சுப் பிரச்சினையாலும் தொண்டையில் தொற்றாலும் சிரமப்பட்டேன். இறுதியில், என்னை கொரோனா தொற்றி இருந்ததை மருத்துவப் பரிசோதனைகள் உறுதி செய்தன," என்றார் இவர்.
சிங்கப்பூரில் பிறந்த திரு மணியின் தாயாரும் சகோதரியும் தமிழகத்தின் நாமக்கல் நகரில் வசிக்கின்றனர். இங்குள்ள தம் பெரியம்மாவும் அவரின் பிள்ளைகளும் இவருக்கு நெருங்கிய உறவுகளாக உள்ளனர். ஆனால் நோய்வாய்ப்பட்ட தம்மை எவராலும் காண இயலவில்லை என்று திரு மணி தெரிவித்தார்.
இவ்வாண்டு ஏப்ரல் 3ஆம் தேதியன்று நோய்ப்பரவல் முறியடிப்புக் காலகட்டத்தின்போது கடும் கட்டுப்பாடுகள் நிலவியதால் இவர் தனிமையை உணர்ந்தார்.
"தனிமையில் இருந்தபோது என் மனம் அங்குமிங்கும் அலைபாய்ந்தது. இயல்பாகவே நான் துணிச்சல்மிக்கவன் என்றாலும் ஒருகட்டத்தில் உயிர் போய்விடுமோ எனத் தோன்றியது. இந்தியாவில் கிருமிப் பரவல் மிரட்டலுக்கு இடையில் வசிக்கும் என் தாயாரிடம் இதைப் பற்றி மனம்விட்டுப் பேசினேன்," என்று இவர் சொன்னார்.
மே மாதம் மூன்றாம் வாரத்தில் மருத்துவமனையிலிருந்து வெளியேறிய திரு மணி, மேலும் 14 நாள்களுக்கு வீட்டிலேயே இருந்தார்.முன்னர் திட்டமிட்டவாறே, தனிமைக்காலம் முடிந்ததும் புதிய வேலையில் சேர்ந்தார்.
கடந்த சில மாதங்களாக வேலையிலேயே மூழ்கியிருந்த திரு மணி, குடும்ப நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்க இயலவில்லை.
"என் ஒன்றுவிட்ட சகோதரருக்கு ஜூன் மாதம் பேத்தி பிறந்தாள். இதுவரையிலும் நான் அந்தக் குழந்தையைக் காணச் செல்லவில்லை," என்று வருத்தத்துடன் கூறிய இவர், தீபாவளி நாளன்று முழுவதும் 'ஸ்கைப்' மூலமாக தமிழகத்திலுள்ள தம் தாயாருடன் உரையாடப்போவதாகச் சொன்னார்.
இந்தியாவில் கிருமித்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் தம் தாயாருக்கு நம்பிக்கையை ஊட்டி, தீபாவளியைக் கழிக்கப்போவதாக இவர் கூறினார்.

