மூன்றாம் கட்டத் தளர்வின்போது உணவகங்களில் எட்டுப் பேர் வரை ஒரே மேசை அருகில் அமர்ந்து உண்ணலாம் என்ற அறிவிப்பு பல்வேறு உணவு கடைக்காரர்களை மகிழ வைத்துள்ளது.
புதிய நடைமுறை நடப்புக்கு வந்த பின்னர் அதிகம் பேர் வருவதன் மூலம் உணவகத்தின் இட வசதி வீணாகாது என்பதால் தாம் மகிழ்ச்சியுடன் இருப்பதாக தமிழ் முரசிடம் கூறினார் 'பனானா லீப் அப்போலோ' உணவகத்தின் உரிமையாளரான சங்கர் நாதன்.
புதிய தளர்வால் வர்த்தகம் மேம்படும் என்று நம்பும் சகுந்தலாஸ் உணவக உரிமையாளர் சரஸ்வதி, இந்த எண்ணிக்கை பத்துப் பேராக இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என கருத்துரைத்தார்.
ஆயினும், எந்த எண்ணிக்கையாக இருந்தாலும் மந்தமாகியுள்ள வர்த்தகம் மீள்வதற்கு சில காலம் எடுக்கும் என்றார் மீராஸ் உணவக உரிமையாளர் ரஜாக். அத்துடன், தமது கடை சிறிதாக இருப்பதால் 8 பேர் கொண்ட மேசைகளுக்கு இடையே சமூக இடைவெளியை உறுதி செய்வது கடினம் என்றும் அவர் கூறுகிறார்.
'புஃபே' முறையில் பரிமாறுவது மீதான கட்டுப்பாடுகள் தொடர்ந்து இருப்பதைச் சுட்டிய கிரீன்லீப் கஃபே உரிமையாளர் ஆர். கலைச்செல்வன், அதிகம் பேர் இவ்வாறு அனுமதிக்கப்படுவதை வரவேற்கிறார்.
இருந்தபோதும் தமது கடைக்கு வரும் பலர் உணவகத்தில் சாப்பிடுவதற்குப் பதிலாக உணவைப் பொட்டலங்களாக வாங்கி செல்
வதாக அவர் சுட்டினார். நோய் பரவல் முறியடிப்பு காலத்தின்போது மேற்கொண்ட பழக்கத்தை வாடிக்கையாளர்கள் பலர் இன்னும் தொடருவதாக திரு கலைச்செல்வன் கூறினார்.
இலவசமாக உணவை வழங்கும் 'கிருஷ்ணாஸ் ஃப்ரீ மீல்ஸ்' உணவகம், விநியோகத்தில் அதிகம் கவனம் செலுத்த விரும்புவதால் உணவகத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை உயர்வு தமது நிறுவனத்தில் தாக்கத்தை ஏற்படுத் தாது என்று இதன் நிர்வாகி ரகுபதி தாஸ் தெரிவித்தார்.
மூன்றாம் கட்ட தளர்வு நடவடிக்கையின்போது மேடை நிகழ்ச்சிகளைக் காண 250 பேர் வரை (50 பேர் கொண்ட ஐந்து வட்டாரங்களாக) செல்ல முடியும்.
ஆனால் கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்களில் இசை நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்படமாட்டாது. "நேரடி இசை நிகழ்ச்சிகளை விரைவில் அனுமதித்தால் இசைக்கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். கேளிக்கைக் கூடங்களில் ஒலிக்கும் நேரடி இசை கேட்பவருக்கு மகிழ்ச்சி தரும்," என்று கூறினார் தி 'கேவர்ன் ஹோர்ஸ் சிட்டி' கூடத்தின் நிர்வாகி லலிதா ஜெய்.
நோய் பரவல் அபாயமுள்ள இரவு நேர நடவடிக்கைகளை சோதனையிடுவது தொடரும் என சுகாதார அமைச்சு டிசம்பர் 14ஆம் தேதி அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. நிலைமை தொடர்ந்து சீராக இருந்தால் மூன்றாம் கட்ட தளர்வு காலத்திற்குள்ளாகவே இரவுநேர நடவடிக்கைகள் சிலவற்றுக்கு அனுமதி வழங்கலாம் என்றது அமைச்சு.
கடை உரிமையாளர்களைப் போல வாடிக்கையாளர்களும் இனி வரும் மாற்றங்களை மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கின்றனர். பொருளாதாரத்திற்கு, குறிப்பாக உள்ளூர் வர்த்தகங்களுக்கு இந்தத் தளர்வுகள் புத்துயிர் ஊட்டும் என நம்பிக்கை கொண்டுள்ள 37 வயது பொறியாளர் ஆர் சந்திரசேகர், இந்த முன்னேற்றம் நீடிப்பது மக்களின் கையில் இருப்பதாகத் தெரிவித்தார்.
நோய் பரவல் முறியடிப்புக் காலக்கட்டத்தின்போது சிறையில் அடைபட்ட உணர்விலிருந்து விடுபட்டதை நினைவுகூர்ந்த 70 வயது வர்த்தகர் அகமது ஷா முகமது ஹசான், அதிகம் பேருடன் உணவகங்களுக்கும் கடைத்தொகுதி
களுக்கும் செல்லும்போது மகிழ்ச்சி அதிகரிக்கும் என்றார்.
அரசாங்கம் சரியான நேரத்தில் தளர்வுகளை அறிமுகம் செய்திருப்பதாகக் கூறிய விற்பனை நிர்வாகி தேவேந்திரன், 64, படிப்
படியான அணுகுமுறையே சிறந்தது எனக் கருதுகிறார்.
ஆயினும், மக்களின் நன்மைக்காகவும் வர்த்தகங்களின் நன்மைக்காகவும் இனிமேல் தளர்வு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டால் நன்றாக இருக்கும் என்று ராணுவ அதிகாரி கிரண்குமார், 29, தெரிவித்தார்.

