கட்டுப்பாடுகளுடன் நகரும் வாழ்க்கை

5 mins read
76cc93a7-766f-4bc4-888d-896300357e24
-
multi-img1 of 3

கொவிட்-19 பரவல் உச்சம் தொட்டதால் வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் கடந்த ஏப்ரலில் கடும் நடமாட்டக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஓராண்டு முடிந்த நிலையில், இடைப்பட்ட காலத்தை வெளிநாட்டு ஊழியர்கள் எவ்வாறு கழித்தனர், அவர்களின் வாழ்க்கைமுறை மாறியுள்ளதா என்பதை அறிந்துவந்தோம்.

கடந்த ஆண்டில் கொவிட்-19 தொற்று வெளி­நாட்டு ஊழி­யர் விடுதி­களை எட்­டிப்­பார்க்­கும் முன் திரு மதி­ய­ழ­கன் கார்த்­தி­கே­ய­னும் மேலும் பதி­னொ­ரு­வ­ரும் ஒரே அறை­யைப் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

இப்­போது அவ­ரு­டன் எட்­டுப் பேர் மட்­டுமே உள்­ள­னர்.

ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் நண்­பர்­க­ளைச் சந்­திக்­க­வும் ஈஸ்ட் கோஸ்ட் பூங்­கா­விற்­கும் லிட்­டில் இந்­தி­யா­விற்­கும் சென்று வர­வும் இப்­போது சாத்­தி­ய­மில்­லா­மல் போய்­விட்­டது. சில வாரங்­க­ளுக்கு ஒரு­முறை ஒரேயொரு கேளிக்கை மையத்­திற்கு மட்­டுமே அவ­ரால் சென்றுவர முடி­கிறது. அதற்கும் அவர் அனு­ம­திச்­சீட்டு பெற்­றாக வேண்­டும்.

மண்­டா­யில் உள்ள தமது விடுதி அறைக்­குச் செல்ல குறிப்­பிட்ட வழி­க­ளை­யும் மின்தூக்­கி­க­ளை­யும் மட்டுமே அவர் பயன்­ப­டுத்­த வேண்­டும்.

தமது அறை இருக்­கும் தளத்­தைத் தவிர அவ­ரால் வேறு தளத்­திற்­குச் செல்ல முடி­யாது.

ஊழி­யர்­கள் ஒன்­று­கூ­டு­வ­தை­யும் தங்­க­ளுக்­குள் கலந்­து­ற­வா­டு­வ­தை­யும் குறைக்­கும் நோக்­கில் இத்­த­கைய கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் இருக்­கின்­றன.

வெளி­நாட்டு ஊழி­யர் விடு­தி­களில் கொரோனா பர­வல் உச்­சத்தை எட்­டி­யதை அடுத்து, கடந்த ஆண்டு ஏப்ரலில் விடு­திக்­குள்­ளும் வெளி­யே­யும் நட­மாட்­டக் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டன.

2020 ஏப்­ரல் 9ஆம் தேதி­யில் இருந்து, கிட்­டத்­தட்ட நான்கு மாதங்­க­ளுக்கு விடு­தி­களில் நாள்­தோ­றும் நூற்­றுக்கு மேற்­பட்ட கிரு­மித்­தொற்று பாதிப்­பு­கள் பதி­வா­யின.

அதன்­பின் அக்­டோ­பர் மாதத்­தில் இருந்து, விடு­தி­களில் கிருமிப் பரவல் வெகு­வா­கக் குறைந்து, பெரும்­பா­லான நாள்­களில் ஒரு­வர்­கூட பாதிக்­கப்­ப­ட­வில்லை என்ற நிலை நில­வி­யது.

இதை­ய­டுத்து, வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கும் வி­டு­தி­களி­லும் சில கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்த அரசாங்கம் திட்­ட­மிட்டு வந்­தது.

இந்­நி­லை­யில், வெஸ்ட்­லைட் உட்­லண்ட்ஸ் விடு­தி­யில் ஏற்­கெனவே கொரோனா பாதிப்­புக்­குள்­ளாகி மீண்ட 17 பேர் உட்­பட 19 பேருக்­குத் தொற்று உறு­தி­யா­னதை அடுத்து, அர­சாங்­கம் கட்­டுப்­பா­டு­களைத் தளர்த்­தும் திட்­டத்­தைத் தள்­ளிப்­போட்­டுள்­ளது.

முன்­ன­தாக, மாதம் ஒரு­முறை மட்­டும் விடுதி ஊழி­யர்­க­ளைச் சமூ­கத்­தில் அனு­ம­திக்­கும் முன்­னோ­டித் திட்­டம் இவ்­வாண்­டின் முதல் காலாண்­டில் தொடங்­கும் என அர­சாங்­கம் அறி­வித்­தி­ருந்­தது. ஆயி­னும், அத்­திட்­டம் இன்­னும் தொடங்­கப்­ப­ட­வில்லை.

ஓராண்­டிற்­கு­முன் வெளி­நாட்டு ஊழி­யர் விடு­தி­களில் சராசரியாக 88 விழுக்­கா­டாக இருந்த தங்­கி இ­ருப்­போர் விகிதம், இப்­போது ஏறத்தாழ 60 விழுக்­காட்­டிற்­குக் குறைந்து­விட்­ட­தாக மனி­த­வள, தேசிய வளர்ச்சி அமைச்­சு­க­ளின் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.

அவ்­வ­கை­யில், மொத்­தம் 6,300 படுக்­கை­க­ளைக் கொண்ட வெஸ்ட்­லைட் மண்­டாய் விடு­தி­யில் இப்­போது 4,200 பேர் மட்­டுமே உள்­ள­னர். கொவிட்-19 தொற்­றுக்­கு­முன் அந்த எண்­ணிக்கை 90 விழுக்­காட்­டிற்­கும் அதி­க­மாக இருந்­தது.

ஊழி­யர்­கள் ஊர் திரும்­பி­விட்­டது, பய­ணக் கட்­டுப்­பா­டு­க­ளால் புதிய, இப்­போ­துள்ள வேலை அனு­ம­திச்­சீட்டு ஊழி­யர்­கள் சிங்­கப்­பூர் திரும்ப முடி­யாமை, ஊழி­யர்­க­ளுக்கு அதிக இட­வ­ச­தியை அளிக்க வேண்­டி­யி­ருத்­தல் போன்­ற­வற்றை அதற்­குக் கார­ண­மா­கக் குறிப்­பிட்­டார் வெஸ்ட்­லைட் விடுதி­களை நடத்­தும் 'செஞ்­சு­ரி­யன்' நிறு­வ­னத்­தின் தொடர்­புப் பிரிவுத் தலை­வர் டேவிட் ஃபே.

இருப்­பி­னும், "பாது­காப்பு விதி­மு­றைக­ளைப் பின்­பற்ற வேண்­டிய தேவையை உணர்ந்து, பெரும்­பாலான ஊழி­யர்­கள் அதன்­படி நடந்­து­கொள்­வது மகிழ்ச்சி அளிக்­கிறது," என்று திரு டேவிட் சொன்­னார்.

'மேம்பட்ட வசிப்பிடச் சூழல்'

பொது­வாக, வசிப்பிடச் சூழல் மேம்­பாடு கண்­டிருப்பதாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நேர்­கண்ட ஊழி­யர்­கள் தெரி­வித்­த­னர்.

விடு­தி­களில் ஒரு சில கிருமி பாதிப்­பு­களே பதி­வாகி வரு­வ­தா­லும் பல­ரும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தா­லும் கிரு­மிப் பர­வ­லுக்கு முந்­திய நிலை­மைக்கு விரை­வில் திரும்ப வேண்­டும் என்று ஊழி­யர்­கள் சிலர் ஏங்­கு­கின்­ற­னர்.

வாழ்க்கை இயல்­பு­நி­லைக்­குத் திரும்­ப­லாம் என்­ப­தற்­கான சில அறி­கு­றி­கள் தெரிகின்றன. அனு­மதி பெற்று சில சமூக வச­தி­கள் படிப்­ப­டி­யா­கத் திறக்­கப்­பட்டு வரு­கின்­றன. எடுத்­துக்­காட்­டாக, கடந்த ஆண்­டின் பிற்­ப­கு­தி­யில் இருந்து வெஸ்ட்­லைட் மண்­டாய் உடற்­பயிற்சிக்­கூ­டம் திறக்­கப்­பட்­டுள்­ளது.

புனித ரம­லான் மாதத்தை ஒட்டி, இர­வுத் தொழு­கை­யில் அதி­க­பட்­சம் 50 பேர் கலந்­து­கொள்­ளும் வகை­யில் இட­வ­சதி ஏற்­ப­டுத்­தித் தரப்­பட்­டுள்­ளது.

அவ்­வி­டு­தி­யில் கடந்த மாதத்­தில் இருந்து சில மேசை­கள், நாற்­கா­லி­க­ளுடன் 'பியர் கார்­டன்' திறக்­கப்­பட்­டுள்­ளது. ஊழி­யர் ஒரு­வர் அரைமணி நேரத்திற்குள், அதி­க­பட்­சம் இரண்டு கலன் 'பியரை' மட்­டும் அருந்­த­லாம். அவர்கள் தங்­க­ளது அறை­க­ளுக்கு மதுவை எடுத்­துச் செல்ல அனு­ம­தி­யில்லை.

இருப்­பி­னும், அங்­கொ­ரு­வர் இங்­கொ­ரு­வ­ராக வசிப்­பி­டச் சூழல் முன்­னி­ருந்­த­தைப் போலவே இப்­போ­தும் மோச­மாக உள்­ளது என்று ஊழி­யர்­கள் சில­ரி­டம் இருந்து புகார் வரு­வ­தாக 'டிட­பிள்­யூசி2' எனும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான ஆத­ர­வுக் குழு­வின் பொது மேலா­ளர் ஈத்­தன் குவோ சொன்­னார். அவற்றை உட­னுக்­கு­டன் மனி­த­வள அமைச்­சின் கவ­னத்­திற்­குக் கொண்டு சென்று, விரைந்து நட­வடிக்கை எடுக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

ஊழியர் பற்றாக்குறை

பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி நடந்துகொள்வது ஊழியர்களிடத்தில் புதிய இயல்புநிலையாக மாறி விட்டாலும் சுருங்கிவரும் வெளிநாட்டு ஊழியரணி குறித்து நிறுவனங்கள் கவலைகொள்கின்றன.

கட்டுமானம், கப்பல் பட்டறை, செய்முறை தொழில்துறை ஆகிய துறைகளில் கடந்த 2019 டிசம்பரில் மொத்தம் 370,100 வேலை அனுமதிச்சீட்டு ஊழியர்கள் இருந்தனர். 2020 டிசம்பரில் அந்த எண்ணிக்கை 311,000ஆகக் குறைந்துவிட்டது.

தொடக்கத்தில் சொந்த ஊரிலுள்ள குடும்பத்தினரை எண்ணி, ஊழியர்கள் சிலர் தாய்நாடு திரும்பிவிட்டனர்.

ஆனால், இப்போது நிலைமை அப்படியில்லை. இங்கிருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் ஊர் திரும்ப விரும்பவில்லை என்றும் தங்கள் நாட்டைக் காட்டிலும் சிங்கப்பூரில் கொரோனா சூழல் பெரிதும் மேம்பட்டு உள்ளதால் வேலைக்காகப் பலரும் இங்கு வருவதற்கு விரும்புகின்றனர் என்றும் கூறப்படுகிறது. ஆயினும், எல்லைக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால் அவர்களில் பலரும் இங்கு வர முடியாமல் போகலாம்.

தளர்வுகள் அறிவிப்பு தாமதமாகலாம் என அச்சம்

கட்­டுப்­பா­டு­கள் விரை­வில் தளர்த்­தப்­படும், முன்­போல பல இடங்­களுக்­கும் சென்று வர­லாம் என விடு­தி­களில் தங்­கி­யுள்ள வெளி­நாட்டு ஊழி­யர்­கள் பல­ரும் நம்­பிக்­கை­யு­டன் இருக்­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், வெஸ்ட்­லைட் உட்­லண்ட்ஸ் விடு­தி­யில் மீண்­டும் சில­ரைக் கிருமி தொற்­றி­யி­ருப்­பது அவர்­க­ளைக் கவ­லை­யில் ஆழ்த்தி இருக்­கிறது. அத­னால், இப்­போ­தைக்­குக் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­ப­டாதோ எனும் அச்­சம் அவர்­களி­டம் தொற்றியுள்ளது.

இவ்­வாண்டு ஜன­வரி 14ஆம் தேதி பொங்­கல் திரு­நா­ளன்று பொங்­கோல் எஸ்11 விடு­தி­யில் உள்ள திரை­ய­ரங்கு மீண்­டும் திறக்­கப்­பட்டு, முன்­னணி நடி­கர்­க­ளின், இயக்குநர்களின் படங்­கள் அங்கு திரை­யி­டப்­பட்டு வரு­கின்­றன.

நடி­கர் விஜய்­யின் 'மாஸ்­டர்' திரைப்­ப­டத்தை அங்கு பார்த்­த­தா­கக் கூறி­னார் 24 வய­தான திரு மார்க்­கண்­டன் பொன்­ராஜ். ஒன்­றரை ஆண்­டு­க­ளா­க இங்கு வேலை செய்­து­வ­ரும் அவர் திரை­ அரங்­கிற்­குச் சென்று பார்த்த முதல் படம் இது­தான்.

கடந்த மாதம் எஸ்11 விடு­தி­யைச் சேர்ந்த 64 ஊழி­யர்­கள் சிங்­கப்­பூர் ராட்­டி­னத்திற்குச் சுற்­றுப்­ப­ய­ணம் சென்றுவர மனி­த­வள அமைச்சு ஏற்­பாடு செய்­தது. விடுதி ஊழி­ய­ர் திரு லட்­சு­ம­ணன் முர­ளி­த­ரன், 44, அப்பயணத்தை வழிநடத்தினார். "அடுத்த மாதம் செந்­தோசா தீவிற்­குச் சென்­று­வரும் திட்­டமுள்­ளது. விடு­தி­யில் சமைக்க அனு­ம­தி­யுண்டு. கட்­டுப்­பாட்­டு­டன் மதுக்­கடை திறக்­கப்­படு­கிறது. ஆயி­னும், வெளி­யில் கடை­க­ளுக்­குச் செல்ல முடி­ய­வில்­லையே என்ற வருத்­தம் பல­ருக்­கும் உண்டு. நாம் விரும்­பு­வ­து­போல இணை­யத்­தில் வாங்க முடி­யாது. அத­னால், பாது­காப்­பா­கக் கடை­களுக்­குச் சென்று வர அர­சாங்­கம் ஏற்­பாடு செய்ய வேண்­டும்," என்று அவர் கேட்­டுக்­கொண்­டார்.