பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள நிறுவனமான எஸ்பிஎச் நிறுவனம், கடந்த ஆண்டுகளில் ஊடக விளம்பர வருமானம் பெருமளவு குறைந்ததால் தனது ஊடகத் தொழிலை தனியாகப் பிரிக்கப்போவதாக இம்மாதத் தொடக்கத்தில் அறிவித்தது. எஸ்பிஎச் ஊடகத் தொழிலுடன் நிலச்சொத்து உள்ளிட்ட வேறு தொழில்களிலும் முதலீடு செய்துள்ளது.
புதிய நிறுவனமான எஸ்பிஎச் ஊடக அறநிறுவனம் என்ற அந்த புதிய நிறுவனத்துக்கு முன்னாள் அமைச்சர் கோ பூன் வான் தலைமை தாங்குவார்.
இடைக்காலத் தலைமை நிர்வாக அதிகாரியாக எஸ்பிஎச் நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைமை நிர்வாகியாக இருந்தவரும் நீண்ட கால பத்திரிகை அனுபவம் உள்ளவருமான திரு பேட்ரிக் டேனியல் பணியாற்றுவார்.
பட்டியிலிடப்பட்ட நிறுவனத்துக்குரிய கட்டுப்பாடுகள் இந்தப் புதிய நிறுவனத்திற்கு இராது.
பட்டியலிடப்பட்ட நிறுவனமாக இருந்தபோது, எஸ்பிஎச் ஊடகங்கள் லாபம் ஈட்ட வேண்டும் என்று பங்குதாரர்கள் எதிர்பார்ப்பார்கள். லாபத்தில் அவர்களுக்கு பங்கு அளிக்கப்படும். இனிமேல் இந்த நெருக்கடி இருக்காது.
புதிய நிறுவனம் தமிழ் முரசு உள்ளிட்ட எஸ்பிஎச் செய்தித்தாள்களின் மின்னிலக்க மயமாக்கலில் அதிக கவனம் செலுத்தும். மின்னிலக்க உருமாற்றம், திறன் வளர்ச்சி போன்ற ஊடக முயற்சிகளுக்கு அரசாங்கத்தின் உதவியையும் வேறு நிதியுதவிகளையும் பெறமுடியும். இதேபோன்ற நிதியுதவியைப் பெற்று செயல்பட்டு வரும் சிங்கப்பூரின் முக்கிய ஒளி/ஒலிபரப்பு ஊடகம் மீடியாகார்ப்.
எனினும், இந்தப் புதிய நிறுவனம் செயல்பட வருவாய் ஈட்ட வேண்டும். விளம்பரம் தேவை. சந்தா தேவை. வாசகர்களின் பெருக்கமும் கட்டாயம் தேவை. நிதியுதவி கூடுதல் பாதுகாப்பு.
புதிய நிறுவனத்தில் முக்கிய பங்குதாரர்கள் நிறுவன இயக்குநர்கள், ஊழியர்களை நியமிப்பது தொடர்பாக எடுக்கப்படும் தீர்மானங்களில் சிறப்பு அதிகாரம் பெற்றிருப்பர். இதன்மூலம் சிங்கப்பூரின் நிலைத்தன்மை, வளப்பம் ஆகியவற்றில் கடப்பாடு கொண்டவர்களின் கைகளில் பொறுப்பு இருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது.
வாசகர்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப மின்னிலக்க உருமாற்றம், திறன் வளர்ச்சி போன்ற ஊடக முயற்சிகளுக்கு அரசின் உதவி பெறுதற்கு தடை இராது.
எஸ்பிஎச்சின் சீரமைப்புப் பரிந்துரையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. இதற்கான தேவை, காரணங்களை விளக்கி தொடர்பு, தகவல் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் சென்ற திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் அமைச்சர்நிலை அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
உள்ளூர் செய்தி நிறுவனங்கள் பொருளியல் அமைப்புகள் மட்டுமல்ல, அவை நமது பண்புெநறிகளைப் பிரதிபலிக்கும், போற்றுதற்குரிய அமைப்புகள் என்றார் அவர்.
இந்த ஊடக நிறுவனத்துக்கு தொடக்க நிதியாக $80 மில்லியன் ரொக்கத்தையும் $30 மில்லியன் பெறுமானமுள்ள பங்குகளையும் வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
எஸ்பிஎச் நிறுவனத்தின் ஏறக்குறைய 2,500 ஊடகத்துறை ஊழியர்கள் எஸ்பிஎச் ஊடக அறநிறுவனத்துக்கு மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்பிஎச் ஊடக அகாடமி
முதல் தர மின்னிலக்க தொழில்நுட்ப குழுவினரை உருவாக்க எஸ்பிஎச் ஊடக அகாடமி அமைக்கப்படும். அத்துடன், செய்தி, மின்னிலக்கத் துறைகளில் கல்வி கற்பதற்கு எஸ்பிஎச் கல்வி உபகாரச் சம்பளங்கள் வழங்கப்படும். தற்போதைய செய்தியாளர்களுக்கும் மேற்படிப்புக்கும் உலகத்தர ஊடகங்களில் வேலைப் பயிற்சித் திட்டங்களும் வழங்கப்படும்.

