நோன்புப் பெருநாள் அலங்காரத்தில் ஒரு மலாய்/முஸ்லிம் தம்பதியின் திருமணப் படத்தை அனுமதியின்றிப் பயன்படுத்தியதற்காக மக்கள் கழகம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.
தியோங் பாரு வீடமைப்புக் கழக குடியிருப்பு வட்டாரத்தில் அமைக்கப்பட்டிருந்த அந்த அலங்காரத்தை மக்கள் கழகம் அகற்றிவிட்டது.
ராடின் மாஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மெல்வின் யோங் குடியிருப்பாளர்களுக்கு நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கூறும் பதாகையில், மலாய் பாரம்பரிய உடை அணிந்த தம்பதியருடன், திருமண சின்னங்களும் இருந்த அப்படம் இடம்பெற்றிருந்தது. ஓர் அலங்காரப் பகுதியில் இந்தப் பதாகை வைக்கப்பட்டிருந்தது.
இது குறித்த இன்ஸ்டகிராமில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பல செய்திகளை 10,000க்கும் அதிகமானோர் பார்வையிட்டனர். அதில், தமது திருமணப் படம் அலங்காரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தமது நண்பர்கள் இருவர் தமக்குத் தெரியப்படுத்தியதாக கூறியிருந்தார் திருமதி சாரா பாஹிராப், 30.
அந்தப் படத்தைப் பயன்படுத்த தம்மிடமோ, தமது கணவரிடமோ அல்லது புகைப்படக்காரரிடமோ அனுமதி கோரப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவரது திருமணம் 2017ல் நடந்தது.
தமது அந்தரங்கத்தை ஊடுருவியது ஒரு பக்கம் இருக்க, தமது படம் கேளிக்கைக்காவும் பொழுது போக்கிற்காகவும் பயன்படுத்தப்பட்டதே தம்மைக் கோபப்படுத்தியதாக தொடர்புத் துறையில் பணிபுரியும் திருமதி சாரா ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
"அவர்கள் அந்தப் படத்தைப் பெரிதாக்கி, எங்கள் முகங்களைத் தனியாக வெட்டியெடுத்து, அந்தப் படத்துடன் தொடர்பே இல்லாத நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்திற்குப் பயன்படுத்தியுள்ளனர்," என்றார் அவர்.
வராபி எண்டர்பிரைஸ் (கலைக்கூடம்) என்ற நிறுவனத்தை அந்த அலங்காரத்தைச் செய்ய ராடின் மாஸ் தொகுதி அலுவலகம் ஈடுபடுத்தியது. நிறுவனம் இணையத்திலிருந்து அந்தப் படத்தைப் பதிவிறக்கி பயன்படுத்தியுள்ளது. பதாகை உள்ளிட்ட அலங்காரத்தை ராடின் மாஸ் தொகுதி அலுவலகம் வைத்தது என்று மக்கள் கழகத்தின் அறிக்கை விளக்கம் அளித்தது.
இது நடந்திருக்கக்கூடாது. நிறுவனமோ, ராடின் மாஸ் அலுவலகமோ படத்தைப் பயன்படுத்த அனுமதி பெறவில்லை. இது நடைமுறை கொள்கைகளுக்கு எதிரானது. இது குறித்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது கூறியது.
மேலும், கலாசாரங்களைப் புரிந்து, உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுக்க தமது ஊழியர்கள், ஈடுபடுத்தப்படும் வெளிநிறுவனங்களுக்கு வழிகாட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கழகம் கூறியது.
இதுகுறித்து தஞ்சோங் பகார் நகர மன்றத்துக்கும் மக்கள் கழக தலைமை நிர்வாக இயக்குநர் திரு லிம் ஹோக் யுவுக்கும் வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் அனுப்பியதாகக் கூறினார் திருமதி சாரா.
திரு லிம் மன்னிப்புக் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியதாகவும் கலாசார, சமூக, இளையர் துணைஅமைச்சரும் இரண்டாவது சட்ட அமைச்சருமான எட்வின் டோங் தனிப்பட்ட செய்தி மூலம் மன்னிப்புக்கேட்டதாகவும் அவர் தெரிவித்தார். திரு டோங், மக்கள் கழகத்தின் துணை தலைவருமாவார்.
இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளப்படும் என்று நம்புவதாக சாரா கூறினார்.

