இந்து இளங்கோவன்
உணவகங்களுக்குச் சென்று சாப்பிடும் வழக்கம் சில காலமாகவே நின்றுபோனது. உணவு விநியோகமே பெரிதும் நாடப்படுகிறது. இந்த மாற்றத்தால் உணவங்காடிக் கடைக்காரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல உணவங்காடிகள் மின்னிலக்க முறைக்கு மாறி, கிருமிச் சூழல் மாற்றங்களை ஏற்றிருந்தாலும் வாடிக்கையாளர்களின் விகிதம், வியாபாரம் இரண்டும் கடும் சரிவைக் கண்டுள்ளன.
அமோய் ஸ்திரீட் உணவங்காடியில் கடை வைத்திருக்கும் 65 வயது திருமதி சல்மா, கடந்த 11 ஆண்டுகளாக தம் கடைக்கு வரும் அலுவலகக் கூட்டத்தினருக்காக சுவையான உணவை விற்பனை செய்து வந்தார். கிருமிச் சூழல் துவங்கியதிலிருந்து 70% வாடிக்கையாளர்களை இழந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். மத்திய வர்த்தக வட்டாரத்தில் அமைந்துள்ள இவரது கடை, உணவு விநியோகச் சேவையையும் வழங்குவதில்லை.
அண்மையில் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ள கொவிட்-19 கட்டுப்பாடுகளால் வியாபாரம் மேலும் கடுமையான வீழ்ச்சி கண்டிருப்பதாக அவர் கூறினார். இருப்பினும், திருமதி சல்மா ஒவ்வொரு நாளும் தமது கடையை நடத்திவருகிறார்.
சிபிடி உணவங்காடிகளைத் தவிர, வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிவாசிகளையும் இந்தக் கிருமித்தொற்றுச் சூழல் விட்டு வைக்கவில்லை. பலதரப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் அவர்களது நடமாட்டச் சுதந்திரம் கணிசமாகக் குறைந்துள்ளது.
இந்த இரு குழுக்களுக்கும் ஒரே நேரத்தில் ஆதரவு வழங்கும் அறப்பணிதான் 'விஇட்' (WeEat). சிங்கப்பூரர்களிடமிருந்து நன்கொடை திரட்டி, அப்பணத்தில் உணவங்காடிகளிலிருந்து உணவை வாங்கி, அதை வெளிநாட்டு ஊழியர்களுக்கு விநியோகம் செய்யும் திட்டமாகும். கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள உணவங்காடிக் கடைக்காரர்களுக்கு வருமான ரீதியாக உதவவும் மன ரீதியாக ஆதரவு வழங்கவும் தொடங்கப்பட்ட முயற்சிதான் இது. இதை உள்ளூர்க் கலைஞர் ஷபீரின் 'ஷபீர் மியூசிக் ஏஷியா', கொவிட்-19 வெளிநாட்டு ஊழியர் ஆதரவுக் கூட்டணி அமைப்பு இரண்டும் இணைந்து '24 நியூஸ் ஏஷியா'வின் ஆதரவோடு நடத்திவருகின்றன.
தற்போதைய கட்டுப்பாடுகள் வயதான ஓர் உணவங்காடிக் கடைக்காரரை எவ்வாறு பாதித்துள்ளது என்பதைப் பற்றிய செய்தி ஒன்றைப் படித்த ஷபீர், பாதிப்புக்குள்ளாகிய இத்தகைய கடைக்காரர்களுக்குக் கைகொடுக்கவேண்டும் என்று முடிவெடுத்தார். 'ஷபீர் மியூசிக் ஏஷியா'வின் இயக்குநர் திரு புவனின் உதவியுடன் இந்த அறப்பணி வெற்றிகரமாக நடந்துவருகிறது.
"இந்தக் கடினமான காலகட்டத்தில் உணவங்காடிக் கடைக்காரர்களுக்கு நிதி உதவி மட்டும் தேவைப்படுவதில்லை. தங்களது உணவை ருசிக்க மக்கள் கூட்டம் வரும் என்ற நம்பிக்கையும் அதிகம் தேவைப்படுகிறது," என்று கூறினார் திரு புவன். இத்திட்டத்துக்காக இணைந்த தொண்டூழியர்கள், இம்மாத முதல் வாரத்தில் அமோய் ஸ்திரீட் உணவங்காடி நிலையத்திற்குச் சென்று அங்குள்ள கடைக்காரர்களைச் சந்தித்துப் பேசினர். சுமார் 170 'கோரேங் பீசாங்' பொட்டலங்களை, திரு நூர் என்பவரின் கடையிலிருந்து வாங்கி தங்குவிடுதிவாசிகளுக்கு விநியோகம் செய்தனர் தொண்டூழியர்கள்.
ஜூன் மாத இறுதிக்குள் $10,000 திரட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது இந்த உதவித் திட்டத்தின் ஏற்பாட்டுக் குழு. இதுவரை $2500 திரட்டப்பட்டுள்ளது. நிதி உதவிக்கும் அப்பால் சமூகத்தை ஒருசேரக் கொண்டுவரும் ஒரு வாய்ப்பாக இத்திட்டத்தைத் கருதுகிறது ஏற்பாட்டுக் குழு.