'தமிழச்சி'. அவளின் அடையாளம் ஒரு குறுகிய விளக்கத்தில் அடங்காது, அது விரிவானது என்பதை உணர்த்தும் முயற்சியே 'தமிழச்சி' அருங்காட்சியகம். இணையம் வழி நடைபெறும் இது, சிங்கப்பூர் தமிழ் பெண் என்பவள் யார் என்பதை சிங்கப்பூர்வாழ் சராசரி தமிழ் பெண்களே கூறி நமது சிந்தனையைத் தூண்டும் படைப்பாகும்.
'தமிழச்சி: கட்டுமானத்தில் உள்ள, தமிழ் பெண்ணின் இலக்கமுறை அருங்காட்சியகம்' என்ற தலைப்பைக் கொண்டுள்ள இந்த அருங்காட்சியகம், 'T:>Works' நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள N.O.W.2021 விழாவின் ஒரு பகுதியானது. 'பிரவுன் வாய்சஸ்' நாடகக் குழுவால் சுவாரசியமான வகையில் படைக்கப்படுகிறது.
இந்த அருங்காட்சியக உருவாக்கத்தின் ஒரு பகுதியாக, 'சிங்கப்பூர் தமிழ் பெண்கள்' என்ற அடையாளம் கொண்டுள்ள 22 பெண்களுடன் நடந்தேறிய தொடர் ஆலோசனை பட்டறைகளில் சேகரிக்கப்பட்ட கருத்துகள், அவர்களது வாழ்க்கையில் முதன்மை பெறும் சில பொருட்கள் ஆகியவை அருங்காட்சியகத்தில் அங்கம் வகிக்கின்றன.
சிங்கப்பூர் தமிழ் பெண்களின் கதைகளைச் சொல்லும் விதமாக, 'ஸ்டிக்கர் பொட்டு', 'தாலி', 'மஞ்சள்', 'அலுமினிய பானை', போன்ற சில பொருட்கள் அருங்காட்சியகத்தில் உள்ளன. இவை வளர்ந்து வரும் ஒரு தமிழச்சியின் வாழ்க்கைப் பகுதி என்கின்றனர் அருங்காட்சியகக் குழுவினர்.
"இந்த அருங்காட்சியகத்திற்குக் காலக்கெடுவோ ஒரு முடிவோ இல்லை, இதில் சிங்கப்பூர் தமிழ் பெண்களின் பங்களிப்புகள் தொடர்ந்து சேகரிக்கப்படும் அதனால்தான் இதை 'கட்டுமானத்தில் உள்ள அருங்காட்சியகம்' என்று அழைக்கிறோம்," என்றார் படைப்பிற்கு கருத்துருவாக்கம் தந்து தொடக்கி வைத்த மேற்பார்வையாளரும் ஆராய்ச்சியாளருமான குமாரி வித்யா சுப்ரமணியம். இவருடன் பிரபல உள்ளூர் நாடகக் கலைஞர் கிரேஸ் கலைச்செல்வி இயக்குநராகவும் நாடக எழுத்தாளர் ராஜ்குமார் தியாகராஜ் எழுத்தாளராகவும் இந்த அருங்காட்சியகத்திற்கு மெருகூட்டியுள்ளனர்.
அருங்காட்சியகத்தின் பொருட்காட்சியில், திருமதி ஜான்சிராணி தங்கவேல், 65, என்பவரின் பட்டச் சான்றிதழும் இடம்பெற்றுள்ளது. 1978ஆம் ஆண்டில் அப்போதைய நன்யாங் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஜான்சிராணி, அன்று சீன மொழி பல்கலைக்கழகமாக இருந்த நன்யாங் பல்கலைக்கழகம் ஆங்கில மொழி ஊடகப் பல்கலைக்கழகமாக மாறிய போது, முதன்முதலில் சேர்ந்த மாணவர்களில் ஒருவர். அப்பொழுதெல்லாம் தமிழ் பெண்கள் பட்டம் பெறுவதென்பது அரிது. அந்த பட்டச் சான்றிதழ் தமது அடையாளத்தின் பெருமை என்று குறிப்பிட்டிருக்கிறார் தமது 52வது வயதில் முதுகலை பட்டம் பெற்றுள்ள திருமதி ஜான்சிராணி.
சிங்கப்பூர் தமிழ் பெண் என்பவள் யார், அவள் எவ்வித வாழ்க்கை முறையைக் கொண்டவள் என்பதை வெளிக்கொணரும் ஒரு தளமாக இந்த அருங்காட்சியகம் அமையும் என்று நம்புவதாக தெரிவித்தார் எழுத்தாளர் ராஜ்குமார்.
இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட: https://www.notordinarywork.com/thamizhachi-by-brown-voices
செய்தி: இந்து இளங்கோவன்