சிங்கப்பூர் கவனத்துடன் செயல்படாவிட்டால் இனவாதம், வெளிநாட்டினர் மீதான வெறுப்பு போன்றவை வழக்கமானவையாக மாறிவிடும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் எச்சரித்துள்ளார்.
பெரும்பாலான சிங்கப்பூரர்கள் கண்ணியமானவர்கள். இனவாதத்துடன் தொடர்பில்லாதவர்கள். இருப்பினும் இனவாத நெருப்பு கிளறிவிடப்படுவது தொடர்ந்தால் நமது நிலைமை அதிக இக்கட்டில் சிக்கிவிடும் என்ற திரு சண்முகம், இந்தப் போக்கு சரியல்ல என்பதை அனைத்துத் தரப்பினரும் வெளிப்படையாகக் கண்டிப்பது அவசியம் என்றார்.
சிங்கப்பூரின் பல இன கலாசாரத்தை மெத்தனமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று என்பதை அண்மைய இனவாத சம்பவங்கள் நினைவுபடுத்துவதாகக்கூறிய வர்த்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங், பல இன சமூகத்தில் வாழ்கிறோம் என்பதை நினைவில் கொண்டு தொடர்ந்து நல்லிணக்கம் பேண உழைக்க வேண்டும் என்றார்.
இனவாதத்துக்கு எதிரான போராட்டம் சிக்கலான, கடினமான பணி. ஆனால் அதற்கு எதிராக கருணை, இரக்கம், புரிதலுடன் போரிட வேண்டும் என்று 30க்கும் மேற்பட்ட அமைப்புகளின் சார்பாக அண்மையில் வெளியிட்ட கூட்டறிக்கையில் சிங்கப்பூர் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
கொள்கை மாற்றம்
முனைவர் அ.வீரமணியின் பரிந்துரை சில கொள்கை மாற்றங்கள் வேண்டும் என்பது.
சிண்டாவில் சீனரும் மெண்டாக்கியில் இந்தியரும் சீன சங்கத்தில் மலாய்க்காரரும் பங்காற்றினால், தனித்தனி சமூகங்களின் தனிப்பட்ட பலங்களையும் பலவீனங்களையும் மற்ற சமூகங்கள் புரிந்துகொள்ளும். இனங்களுக்கிடையிலான வெறுப்பைக் களைவதில் மேல்மட்ட நிலையில் இன்னும் அதிக முயற்சி எடுக்கலாம்.
எடுத்துக்காட்டாக இந்தியாவுடனான முழுமையான பொருளியல் உடன்பாடு (CECA) குறித்த வெறுப்புணர்வுக்கு அதுகுறித்த அறியாமையே காரணம். உலகளாவிய திறனாளர்களை பன்னாட்டு நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்தி அவர்களை இங்கே நிலைப்படுத்தியுள்ளன. இதனால் சிங்கப்பூர் பொருளியலுக்கு லாபம். அவர்களை விரட்டுவது இந்நாட்டுக்கு நஷ்டம் என்பது தெளிவாக விளக்கப்பட வேண்டும்," என்றார் அவர்.
சமரசம் மாயம் செய்யும்
"இத்தகைய பிரச்சினை எல்லாக் காலத்திலும் இருக்கவே செய்யும். நான் படித்த காலத்தில் பலதரப்பட்ட அடைமொழிகளால் கேலி செய்வார்கள். இது புரிந்துணர்வு இல்லாமல் செய்யப்படும் செயல். புரிந்துணர்வையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறோம் என்பது எப்படி அணுகுவது என்பதைப் பொறுத்து," என்றார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அடித்தள அமைப்புகளில் பணியாற்றி வரும் திரு. திருநாவுக்கரசு.
நேரடி தொடர்பு, உறவாடல்களை அதிகரிப்பதன் மூலம் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம் என்றார் அவர்.
முதலில் பேசித் தீர்க்க முயற்சி செய்ய வேண்டும். அப்படி முடியாதபோது, சமூக சமரச மன்றத்தை நாடலாம். $5.00 தான் கட்ட வேண்டும். இது தனிப்பட்ட முறையில் நடைபெறும் பஞ்சாயத்தாகும். பெரும் பணம் செலவழித்து வழக்கறிஞர், நீதிமன்றம் என்று செல்ல வேண்டியதில்லை. வெளியில் தெரியாமல், தனி அறைக்குள் பிரச்சினையைத் தீர்த்துவிடலாம்.
உலகத்திலேயே சமசர மையமாக சிங்கப்பூர் உள்ளது. சமசரப் பேச்சின் தாக்கம் குறித்து பலருக்கும் இன்னும் தெரியவில்லை என்ற அவர், சமூக மன்றங்களில் தற்போது சமரச மன்றங்கள் திறக்கப்பட்டு வருவதாகவும் திருநாவுக்கரசு கூறினார்.
இன, மத வேறுபாடுகளும் புரிந்துணர்வின்மையும் எப்போதும் இருக்கும். அதை ஒரு சமூகம் எவ்வாறு கையாள்கிறது என்பதைப் பொறுத்த அதன் பாதிப்பின் அளவு இருக்கிறது. சிங்கப்பூரில் வசிப்பவர்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்றார். இங்கு சட்டப் பாதுகாப்பு உள்ளது. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் உள்ளன என்று குறிப்பிட்டார் டாக்டர் சீதா.
தொடர் உரையாடல் தேவை
கடந்த 20 ஆண்டுகளாக மனநல ஆலோசனை வழங்கிவரும் திருவாட்டி ஷர்மினி என். ராமச்சந்திரா, அரசாங்கம், பொது, தனியார் துறை என அனைவரும் இணைந்தே இனவாதத்திற்கான தீர்வுகளைக் கண்டறியமுடியும் என்றார்.
நோய்ப் பரவலுக்கு எதிரான இனவாதத்தை எதிர்கொள்ளவும் அமைச்சுகள் நிலைப் பணிக்குழு ஏற்படுத்தப்பட்டு இப்பிரச்சினையைக் களைய வரையரைகளையும் திட்டப்பணியையும் வெளியிடலாம் என்று ஷர்மினி பரிந்துரைத்தார்.
நிபுணர்கள், இதர பங்குதாரர்களை உள்ளடக்கிய குழுவாக அது இருக்கலாம் என்றும் சொன்னார். மதுப் பழக்கம், போதைப் புழக்கம், சூதாட்டம், குடும்ப வன்முறை, மகளிர் பாதுகாப்பு போன்றவற்றுக்காக பல தரப்பிலும் உரையாடலுக்கும் ஆதரவுக் குழுக்களும் உள்ள நிலையில் இனவாதத்திற்கு எதிராகப் பாதுகாப்பை நிலைநாட்ட ஆதரவுக் குழுவோ, நிரந்தர தொடர் உரையாடல் தளமோ தேவை என்றார்.
இனவாதத்துக்கு எதிரான தனது நிலைப்பாட்டை அண்மையில் உறுதிப்படுத்திய கல்வி அமைச்சு, இனவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆலோசனை தரப்படும்; அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியது.
எவரும் விதிவிலக்கல்ல
இனவாதச் செயலால் பாதிக்கப்படுபவர் சிறுபான்மையினர் மட்டும்தான் என்ற பொதுவான முடிவோடு செயல்படக்கூடாது என்றார் மருந்தகத் துறையில் பணியாற்றும் குமாரி ரஞ்சிதா சுப்ரமணியம், 38. தமது அண்டை வீட்டு சீனர், பொது போக்குவரத்தில் இந்தியர்களால் கேலி செய்யப்பட்ட சம்பவத்தை பகிர்ந்த அவர், அந்தச் சீன மாது தகாத வார்த்தைகளாலும் கையசைவுகளாலும் மோசமான கேலிக்குள்ளானார் என்று கூறினார்.
"சிறுபான்மையினர் என்ற முறையில் நமக்கு ஏற்படும் பாதகங்களை மட்டுமே பேசுவதை விட்டு, நாமும் மற்ற இனத்தவரை அரவணைத்து, ஏற்று, மதித்து வாழவேண்டும். நாம் கொடுக்கும் மரியாதையே அவர்களை நம்மீது அதிகளவில் மரியாதை செலுத்த வழிவகுக்கும். இதுவே சமூகப் பிணைப்புக்கும் நல்லிணக்கத்திற்கும் நாம் ஆற்றும் சிறு பங்கு," என்றார் குமாரி ரஞ்சிதா.